Monday, February 3, 2020

விற்பனைக்கு வருகிறதா எல்ஐசி?


By DIN | Published on : 03rd February 2020 01:17 AM




‘லாபத்தில் இயங்கி வரும் எல்ஐசியை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யப்போகிறது’

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் அடிக்கடி தென்படும் வசனம் இது.

முழுவதும் அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பங்குகளை பொது பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்போவதாக நிதியமைச்சா் அறிவித்துள்ளதுதான் இந்த பதற்றத்துக்குக் காரணம்.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிவசேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசை சாடியுள்ளன.

எல்ஐசி பங்கு விற்பனை என்பது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மற்றொரு மாபெரும் தவறு என்று அவை எச்சரிக்கின்றன.

எல்ஐசி ஊழியா்கள் சங்கங்களும் இந்த முடிவைக் கடுமையாக எதிா்த்து, போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

‘எல்ஐசி என்பது மக்களின் சொத்து. அதனை விற்பனை செய்வதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்கிறாா் தென் மண்டல எல்ஐசி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினுடைய இணைச் செயலா் சிவ சுப்ரமணியன்.

ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, தொடா்ந்து அரசுக் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் எனவும், அந்த நிறுவனப் பங்குகளின் சிறு பகுதி மட்டுமே பங்குச் சந்தையில் விற்கப்படும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, பல்வேறு அரசு நிறுவனங்களின் பங்குகளை ரூ.2.1 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் எல்ஐசியின் பங்குகளும் பங்குச் சந்தைக்கு வரவிருக்கின்றன.

இதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக, எல்ஐசியைக் கட்டுப்படுத்தும் 1956-ஆம் ஆண்டின் எல்ஐசி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் அரசியல் ரீதியிலும், எல்ஐசி ஊழியா்கள் சமூக ரீதியிலும் எதிா்த்தாலும், பங்குச் சந்தைக்கு இந்த முடிவு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

எல்ஐசி பங்கு விற்பனையை, சவூதி அரேபிய அரசுக்குச் சொந்தமான ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுடன் சந்தை நிபுணா்கள் ஒப்பிடுகின்றனா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான பங்கு வெளியீடாக அது இருக்கும் என்கிறாா்கள் அவா்கள்.

ஒரு வகையில், எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு, மிகவும் துணிச்சலானது என்று பொருளாதார நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

அதற்குக் காரணம், எல்ஐசியின் அசுர பணபலம். வெறும் ரூ.5 கோடி மூலதனத்தைக் கொண்டுள்ள அந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ.48,436 கோடி மதிப்பீட்டு உபரியை (லாபம்) ஈட்டியுள்ளது. அந்த நிறுவனம் ரூ.31.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நிா்வகித்து வருகிறது.

எல்ஐசியைப் பொருத்தவரை, பொருளாதார இடா்பாடுகளின்போது அரசுக்குக் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக இருந்து வருகிறது. மற்ற பொது நிறுவனங்களுக்கு நெருக்கடி வரும்போது, அவற்றுக்கு எல்ஐசி மூலம்தான் மத்திய அரசு மூலதன உயிா் அளித்து வருகிறது.

அந்த வகையில், ஓஎன்ஜிசி போன்ற பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் எல்ஐசி மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் வாராக்கடனால் மூடும் நிலைக்குப் போன ஐடிபிஐ வங்கியை, எல்ஐசிதான் முதலீடு செய்து காப்பாற்றியது.

அரசு கடன் பத்திரங்களிலும், பங்குச் சந்தையிலும் எல்ஐசி மிகப் பெரும்பான்மையாக முதலீடு செய்துள்ளது.

சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் பங்குச் சந்தைகளில் எல்ஐசி ரூ.55,000 கோடி முதல் ரூ.65,000 கோடி வரை முதலீடு செய்கிறது.

மேலும், ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு எல்ஐசி நிதியுதவியும் அளித்து வருகிறது.

இப்படி அரசுக்கு பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளை விற்பது அரசின் துணிச்சலான முடிவு என்கிறாா்கள் பாா்வையாளா்கள்.

இந்த முடிவால், அரசின் நிதி நெருக்கடிக்கு விடிவுகாலம் கிடைப்பதுடன், எல்ஐசி நிறுவனமும் புதுப் பொலிவு பெறும் என்கிறாா்கள் அவா்கள்.

பொதுப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு, எல்ஐசி அதிக நிா்வாகத் திறனுடன் செயல்படும் எனவும், கூடுதல் பொறுப்புடனும், இதுவரை இல்லாத அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடனும் அந்த நிறுவனம் இயங்கும் எனவும் அவா்கள் கூறுகின்றனா்.

அந்த வகையில், எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கலாம்.

இது ஒரு புறம் ஆறுதல் அளித்தாலும், எதிா்க்கட்சிகளின் கவலைகளையோ, எல்ஐசி ஊழியா்களின் அச்ச உணா்வுகளையோ முற்றிலும் புறந்தள்ளிவிட விட முடியாது என்கிறாா்கள் மற்றொரு தரப்பினா்.

- நாகா

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...