Sunday, May 6, 2018

மாநில செய்திகள்

தேர்வு மைய குளறுபடி: தமிழக அரசு பகிரங்க குற்றச்சாட்டு அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி



தேர்வு மைய குளறுபடியால் 5,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவதி: சி.பி.எஸ்.இ. ஒத்துழைக்க வில்லை என்று தமிழக அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. ஆனால், இந்த குளறுபடிக்கு தமிழக அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி கொடுத்து இருக்கிறது.

மே 06, 2018, 05:45 AM
சென்னை,

மருத்துவ படிப்புக் கான மாணவர்கள் சேர்க்கை, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரத்து 648 மாணவர்களும், 7 லட்சத்து 46 ஆயிரத்து 76 மாணவிகளும், ஒரு திருநங்கையும் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 345 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 961 பேரும், அதற்கு அடுத்ததாக கேரளாவில் 226 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 792 பேரும், கர்நாடகத்தில் 187 தேர்வு மையங்களில் 96 ஆயிரத்து 377 பேரும், உத்தரபிரதேசத்தில் 171 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 306 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அசாம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, மராத்தி, உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட பிரிவுகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகள் கேட்கப்படும். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவடையும்.

தேர்வு மையங்களில் காலை 7.30 மணி முதல் மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் தேர்வர்கள் செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட்டுடன், அதில் ஒட்டப்பட்டு இருப்பதை போன்ற 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை மட்டும் கொண்டு செல்லவேண்டும். பேனா கொண்டு செல்லக்கூடாது. தேர்வு அறையிலேயே பேனா கொடுக்கப்படும். கைக்கெடிகாரம் அணிந்து செல்லக் கூடாது. மாணவர்கள் அரைக்கை சட்டைதான் அணிந்து செல்லவேண்டும். அதில் பொத்தான் பெரிதாக இருக்கக்கூடாது.

தேர்வு மையத்திற்குள் கால்குலேட்டர், செல்போன், கைப்பை, ஹெட்போன், பென்டிரைவ், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
மாணவிகள் சல்வார், பேண்ட் அணிந்து வரவேண்டும். சேலை அணிந்து வர அனுமதி கிடையாது. காதணி, மோதிரம், மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவை அணிந்திருக்கக்கூடாது. குறைந்த உயரம் கொண்ட செருப்புகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாத மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இந்த தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களிலும் தேர்வை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நேற்று நடைபெற்றன. தேர்வு மையத்தின் பிரதான நுழைவுவாயில் பகுதியில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த தகவல்கள் ஒட்டப்பட்டன. இதை தேர்வு எழுத வரும் தேர்வர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் பார்த்துவிட்டு சென்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ-மாணவிகளில் 5,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற சில வெளிமாநிலங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் அந்த மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுத்தது. மேலும் அரசியல் கட்சியினர், தமிழ்ச்சங்கத்தினர், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர். வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் பெற்றோருடன் பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர்.

கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள மையங்களில் மட்டும் 5,300-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். கேரளா செல்லும் மாணவர்களின் வசதிக்காக நெல்லை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து மட்டும் 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த ஆண்டுதான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 82 ஆயிரத்து 272 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். இதற்காக மாநிலம் முழுவதும் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த ஆண்டில் அதை விட கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் பேர் எழுதலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 30 சதவீதம் பேர் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர். அதாவது இந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் எழுதுகிறார்கள். இதனால்தான் கணிசமான மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு சி.பி.எஸ்.இ.தான் காரணம் என்று தமிழக அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது.

தமிழகத்தில் 170 மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அண்டை மாநிலங்களில் சில ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். அவர்களுக்கு எந்த மன உளைச்சலும் இருக்காது. வெளிமாநிலங்களில் எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்ற விவரத்தை சி.பி.எஸ்.இ. தெரிவிக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.

தமிழகத்தில் எவ்வளவு மாணவர்கள் எழுதுகிறார்கள் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இங்கே தேர்வு மையங்களை அமைத்து இருப்போம். இந்த நிலைக்கு சி.பி.எஸ்.இ.தான் காரணம். இருந்தாலும் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் தமிழகத்தில் போதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு தமிழக அரசுதான் காரணம் என்று சி.பி.எஸ்.இ. பதிலடி கொடுத்து உள்ளது.
‘நீட்’ தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ. தரப்பு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:-

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக கூடுதலாக எந்தெந்த இடங்களில் தேர்வு மையங்கள் திறக்கவேண்டும் என்று குறிப்பிட்டு தமிழக அரசிடம் இருந்து எதுவும் கேட்கப்படவில்லை. அரசு முன்னதாகவே இவ்வளவு மையம் அமைக்கவேண்டும் என்று கேட்டு இருந்தால் நிச்சயமாக கூடுதல் மையங்களை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். மேலும் நீட் தேர்வு மையம் தொடர்பாக நாங்கள் கேட்ட பல தகவல்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பதில்கள் வரவில்லை.

தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பத்தில் இதை அவர்கள் வரிசைப்படி குறிப்பிடுகிறார்கள்.

விதிமுறைகளின்படி கம்ப்யூட்டர் மூலமே தேர்வு மையங் கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் ஊழியர்களின் பங்களிப்போ, குறுக்கீடோ எதுவும் கிடையாது. தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு விட்டால், பின்னர் எந்த சூழ்நிலையிலும் அதை மாற்ற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Maths remains a killer subject as learning gaps widen across grades

Maths remains a killer subject as learning gaps widen across grades  Vishal.Katoch@timesofindia.com 08.06.2026  EDUCATION TIMES As students ...