Sunday, May 27, 2018

அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் ஓய்வெடுக்கும் தெரு நாய்கள்! உ.பியில் அவலம் 

தினேஷ் ராமையா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றின் ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெருநாய்களும் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Photo Credit: ANI

சிதாபூர் பகுதியில் நாய்கள் தாக்கியதில் இந்த மே மாதத்தில் மட்டுமே 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் தெரு நாய்கள் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். .சிதாபூர் சம்பவம் குறித்து பேசிய அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா, ``விலங்குகள் புகுந்து ஒருவரைக் கடித்தால், அதற்கு அரசு எப்படி பொறுப்பாகும்’என அலட்சியமாகப் பதிலளித்தார். இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், அம்மாநிலத்தின் ஹர்தோய் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெரு நாய்கள் சில ஒய்வெடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்த நோயாளிகள் சிலர் கூறுகையில்,` தெருநாய்கள் குறித்து அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் கூறினோம். அதற்கு நீங்களே அந்த நாய்களைத் துரத்தி விடுங்கள் என்று அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள்’ என்றனர். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய சுகாதாரத் துறை அதிகாரி, விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024