Wednesday, May 30, 2018

பிரசாரத்துக்கு வந்த 'போலி' கோலி... மக்களை ஏமாற்றிய தில்லாலங்கடி அரசியல்வாதி 


எம்.குமரேசன்


திரைப்படம் ஒன்றில், நடிகர் கமல்ஹாசனை கோயில் திருவிழாவுக்கு அழைத்துவருவதாக கிராம மக்களிடையே கஞ்சா கருப்பு வாக்குறுதி கொடுப்பார். மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றுக்கொண்டு, கமல்ஹாசன் வேடத்தில் நடித்த சிறுவனை கோயில் திருவிழாவுக்கு அழைத்துவந்து ஊர் மக்களிடையே தர்ம அடி வாங்குவார். அதே போல, தனக்காகத் தேர்தல் பிரசாரம்செய்ய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வருகிறார் என்று புனே அருகே ஊர் மக்களை ஏமாற்றியிருக்கிறார், லோக்கல் அரசியல்வாதி.



ஸ்ரீரூர் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. விட்டல் கண்பத் என்பவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மோகம் அதிகம் என்பதால், தேர்தல் நேரத்தில் அவர்களைக் கவர கிரிக்கெட் கிட்டுகளை வழங்கி இளைஞர்களின் ஓட்டுகளைப் பெற அரசியல்வாதிகள் முயல்வார்கள். கிரிக்கெட் போட்டி நடத்த நன்கொடைகளைத் தாராளமாக அள்ளி வழங்குவார்கள். கண்பத், இவற்றையெல்லாம் தாண்டி சற்று வித்தியாசமாக யோசித்தார். கண நேரத்தில் அட்டகாசமான ஐடியா உதித்தது.

தனக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்ய விராட் கோலியே கிராமத்துக்கு வர இருப்பதாக இளைஞர்களிடம் கண்பத் கூறத் தொடங்கினார். விராட் கோலியுடன் கண்பத் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அடிக்கப்பட்ட பேனர்கள் கிராமம் எங்கும் வைக்கப்பட்டிருந்தன. இளைஞர்களும் இந்திய கேப்டனைப் பார்க்கும் ஆர்வத்துடன் இருந்தனர். சொன்ன மாதிரி, சொன்ன தினத்தில் விலை உயர்ந்த காரில் விராட் கோலி கிராமத்துக்கு வந்து இறங்கினார். கண்பத்துக்காக பிரசாரத்திலும் ஈடுபட்டார். கண்பத் விவரமாக யாரையும் 'போலி' கோலி அருகே நெருங்கவிடவில்லை.



 மகிழ்ச்சியில் திளைத்த இளைஞர்களோ கோலியைக் காண முண்டியடித்தனர். ஒரு சிலர் நெருங்கிச் சென்று செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போதுதான், வந்திருப்பது விராட் கோலி அல்ல 'போலி ' கோலி என்று அறிந்துகொண்டனர். தேர்தலில் வெற்றிபெற அவரைப் போன்ற தோற்றமுடையவரை கண்பத் அழைத்துவந்திருப்பது தெரிந்து ஏமாற்றமடைந்தனர். உண்மை தெரிந்ததும் கண்பத், 'போலி' கோலியுடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024