Tuesday, November 6, 2018


தீபாவளிக்கு கை கொடுத்த நகை சீட்டு வங்கி சேமிப்பை விட இதுக்கு மவுசு


Added : நவ 06, 2018 02:41

சென்னை, தீபாவளி பண்டிகையில், நகை கடைகளில், நகை சீட்டு வாடிக்கையாளர்களால், விற்பனை களைகட்டி உள்ளது. பொதுவாக, வங்கி சேமிப்பை விட, நகைச் சீட்டு மூலம் நகை வாங்கி சேர்ப்பதில், நடுத்தர, ஏழை மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தீபாவளிக்கு, ஜவுளி கடைகளில் தான் திரளான கூட்டம் இருக்கும். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, இனிப்பு கடைகளில் கூட்டம் இருக்கும். இவற்றுக்கு இணையாக இப்போது நகைகடைகளிலும் கூட்டத்தை பார்க்க முடிகிறது. ஜப்பசி மாதம் பிறந்து விட்டால், பெரும்பாலான கிராம மக்கள், சுபகாரியங்களுக்கு தலைமுறை, தலைமுறையாக, நகைகடைகளில் நகைகள் வாங்குவது வழக்கம்.இவர்கள் அல்லாது பிற வாடிக்கையாளர்களை, நகை கடை பக்கம் வரச் செய்வதற்காக, நகை கடைகள் பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றன. இதில் முக்கிய இடம் பிடிப்பது மாதாந்திர சீட்டு. நடப்பாண்டு தீபாவளியில் நகை சீட்டு மூலம் பிரபலமான நகை கடைகளில் கோடிக்கணக்கில் விற்பனை நடந்துள்ளது.

சென்னை போன்ற பிரபல நகரங்களில், பிரபலமாக உள்ள கடைகளில், நகைசீட்டு விற்பனைதான் பிரதானமாக உள்ளது. நகைச்சீட்டு மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க பல்வேறு சலுகை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட தலைநகரங்களில், சிறிய அளவிலான நகைகடைகளுக்கு, நகை சீட்டுதான் வாழ்வதாரம். பழக்கம் இல்லாத கடைக்காரர்களிடம், நகை வாங்குவோர் எண்ணிக்கை குறைவு. இதனால் வழக்கமான வாடிக்கையாளர்களை தக்கவைக்க, நகை வியாபாரிகள் பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றனர்.

 இது, தீபாவளி வியாபாரத்துக்கும் கை கொடுக்கும். பட்டாசு, இனிப்புக்கு தீபாவளி பண்டு பிடிப்பது போல், நகைக்கும், மாதாந்திர சீட்டு பிடிப்பது, தமிழகத்தில், மதுரை, ஈரோடு போன்ற நகரங்களில் முக்கியமாக உள்ளது. இந்தாண்டு, தீபாவளிக்கு, ஈரோடு போன்ற நகரங்களில் மட்டும், நகைச்சீட்டு மூலம் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு, நகை விற்பனையாகியுள்ளது.மாதாந்திர சீட்டு போட்ட வாடிக்கையாளர், முதிர்வின் அடைப்படையில் நகை எடுத்து செல்கின்றனர். மாவட்டத்தில், 500 நகைக்கடைகளில், 200 கடைகள் மாதாந்திர நகை சீட்டு நடத்துகின்றனர். இந்த தீபாவளியை பொறுத்தவரை, நகை சீட்டு விற்பனையே, உள்ளூர் தங்க நகை வியாபாரிகளுக்கு கை கொடுத்துள்ளது. பண்டிகை முடிந்து, ஒரு வாரத்துக்கு பிறகும், இதே அளவு விற்பனை இருக்கும். ஒருவர் மாதம், 1,000 ரூபாய் செலுத்தினால், 12 மாதத்திற்கு, 12,000 பணம் செலுத்தியதற்கு அதே மதிப்புக்கு நகை எடுத்து கொள்ளலாம். இதற்கு, சேதாரம் இல்லை. செய்கூலி இல்லை.மேலும், சீட்டு சேரும் போது, பரிசு உட்பட சலுகை அளிக்கப்படுகிறது.

இதை வங்கி பிக்சட் டெபாசிட்டில் செலுத்தினால், கிடைக்கும் வட்டியை விட இது அதிகம் என பெண்கள் கருதுகின்றனர். மேலும், மாதத்தவணையாக செலுத்துவதால் சுமையாக தெரிவதில்லை. பெரும்பாலான மக்கள், தீபாவளிதோறும், நகை சேர்ப்பதை முக்கிய கடமையாக கொண்டுள்ளனர். அவர்களின் தேர்வு நகை சீட்டு தான்.நடுத்தர மற்றும் உயர்தர மக்கள், நகைச்சீட்டை நல்ல முதலீடாக பார்க்கின்றனர். சேமிப்புக்கு சேமிப்பு, நகையும் சேருவதால், பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் நகைச்சீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சென்னையில் உள்ள பிரபலமான நகைகடையில், 75 சதவீதத்திற்கு மேல், நகை வாங்க வருபவர்கள் நகை சீட்டு வாடிக்கையாளர்கள்தான்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods