Sunday, February 3, 2019


ரூ.150 கோடி செலவில் ஏழுமலையான் கோவில்

Added : பிப் 03, 2019 00:11




திருப்பதி:ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
சமீபத்தில், தமிழகத்தின் கன்னியாகுமரியில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோவில், பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்திலும், மார்ச்சில், ஏழுமலையான் கோவில் திறக்கப்பட உள்ளது. அதேபோல, ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் உள்ள வெங்கடபாளையம் அருகே, ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தானத்திற்கு, 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக, ஆந்திர மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. 

அதில், 150 கோடி ரூபாய் செலவில், ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்தது.அதற்கான பூமி பூஜை, நேற்று முன்தினம் காலை நடந்தது. ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு, ஏழுமலையான் கோவில் கருவறை அமைய உள்ள நிலத்தை, ஏர் கலப்பையால் உழுது, நவதானியம் விதைத்து, பூஜை நடத்தினார்.

இதன்பின், செய்தியாளர்களிடம், சந்திரபாபு நாயுடு கூறியதாவது:திருமலை மலைப் பாதையில், 2003ல் நடந்த குண்டு வெடிப்பிலிருந்து, ஏழுமலையான் என்னை காபாற்றி, மறுஜென்மம் அளித்துள்ளார். தினமும், ஏழுமலையானை வழிபட்டு வருகிறேன். அமராவதியில் கோவில் கட்டும் பணி, இரண்டு ஆண்டுகளில் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024