Monday, May 21, 2018

விமானத்தில் பறக்க வியாபாரிக்கு தடை

Added : மே 21, 2018 02:14

புதுடில்லி : மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவர் கோடீஸ்வர நகை வியாபாரி, பிர்ஜு கிஷோர் சல்லா, 37. இவர், கடந்த ஆண்டு அக்டோபரில், டில்லி - மும்பை மார்க்கத்தில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

அப்போது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இதில் பயணம் செய்யும் கடத்தல்காரர்கள், விமானத்தை, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கடத்தப்போவதாகவும், துண்டு சீட்டில் எழுதி, அதை விமான கழிப்பறையில் ரகசியமாக வைத்தார். இதைப் பார்த்த, விமான ஊழியர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். விமானம் ஆமதாபாத் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

விசாரணைக்கு பின், பிர்ஜு கிஷோர் சல்லா கைது செய்யப்பட்டார். தன் காதலி, டில்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும், இப்படி மிரட்டல் விடுத்தால், டில்லி அலுவலகத்தை மூடிவிடுவர்; அதன் பின், தன் காதலி மும்பைக்கு வந்து விடுவார் என்றும் நினைத்து, இப்படி செய்ததாக, பிர்ஜு தெரிவித்தார்.

விமானத்தில் பயணம் செய்த பயணியரின் உயிருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், பிர்ஜு செயல்பட்டதால், அவர் இனி எந்த விமானத்திலும் பயணம் செய்ய முடியாதபடி தடை விதித்து, மத்திய விமானப் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.07.2026