Sunday, April 29, 2018

கோடிகளைக் குவித்த ரிலையன்ஸ் ஜியோ! 29.04.2018



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்ற ஜனவரி - மார்ச் காலாண்டில் மொத்தம் ரூ.510 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 2016ஆம் ஆண்டின் இறுதியில் தனது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் புதிதாகத் தொடங்கினார். இலவசச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்து வந்த இந்நிறுவனம் பின்னர் குறைந்த அளவிலான கட்டணங்களை நிர்ணயித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வருவாய் ஈட்டத் தொடங்கியது. அதன்படி இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் 3.6 சதவிகித உயர்வுடன் ரூ.510 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இதன் வருவாய் ரூ.504 கோடியாக மட்டுமே இருந்தது.

மேற்கூறிய மூன்று மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 18.66 கோடியாக உயர்ந்துள்ளது. இம்மூன்று மாதங்களில் மட்டும் 2.65 கோடிப் பேர் ஜியோ சேவையில் புதிதாக இணைந்துள்ளனர். இதற்கு முந்தைய அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் புதிதாக 2.15 கோடிப் பேர் ஜியோ சேவையில் இணைந்திருந்தனர். ஜியோ வருவாய் ஈட்டியுள்ள அதே வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் ரூ.652.30 கோடி வருவாய் இழப்பைப் பதிவு செய்திருந்தது. ஜியோவுடனான போட்டி காரணமாக ஏர்டெல் உட்பட இதர நெட்வொர்க் நிறுவனங்களும் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 8.4.2025