Saturday, April 28, 2018

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற திருத்தேர் பவனி!
மா.அருந்ததி
செ.ராபர்ட்

திருக்கடையூரில் எழுந்தருளி இருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (27.4.18) திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தரங்கம்பாடி, திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயம் தருமபுரம் ஆதீனத்துக்கு உரியது. இக்கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்றது. இவ்வாலயம் அகத்தியர், புலஸ்தியர், துர்கை, வாசுகி முதலானோரால் வழிபாடு செய்யப்பட்ட தலமாகும். புகழ்பெற்ற அபிராமி அம்மன் எழுந்தருளியுள்ள பிரசித்தமான தலமும் இது தான். இந்த ஆலயத்தில் சித்திரைத் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நேற்று காலை தொடங்கியது. மலர்களாலும், சிவ சின்னங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமிர்தகடேஸ்வரர் எழுந்தருளினார். காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர். தேர் பக்தர்களின் "சிவசிவ" முழக்கத்துடன் கோயிலின் வீதிகளை வலம் வந்தது. இவ்விழாவினை முன்னிட்டு இன்று கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.





இவ்வாலய சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்துத் தள்ளி, அவரிடமிருந்து காப்பாற்றி மார்கண்டேயரின் ஆயுளை அதிகரிக்க செய்ததால் இக்கோயில் மணிவிழா, பவள விழா, சதாபிஷேகம் ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் இங்கு ஏராளமான மணிவிழா, பவளவிழா திருமணங்கள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர் பவனி கோயிலின் வீதிகளை வலம் வந்து நண்பகல் 12 மணியளவில் கோயிலின் வாசலில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் பிறகு ஆலயத்தில் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அமிர்தகடேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...