Friday, April 28, 2017

டாக்டர்களுடன் அரசு நடத்திய பேச்சு தோல்வி : தொடர்கிறது போராட்டம்
பதிவு செய்த நாள்
27 ஏப்
2017
23:02

'அரசு நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்ததால், போராட்டம் தொடரும்' என, அரசு டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனால், நோயாளிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பில், ௫௦ சதவீத இட ஒதுக்கீடு கோரி, புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, அரசு டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டம், நேற்று, ஒன்பதாவது நாளாக நீடித்தது. இந்நிலையில், டாக்டர்களுடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், நேற்று தலைமை செயலகத்தில், பேச்சு நடத்தினர். அப்போது, 'அமைச்சரவையை உடனே கூட்டி, இட ஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வடிவை கொண்டு வர வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தினர். 'உங்கள் கோரிக்கையை, முதல்வரிடம் கூறுகிறோம். இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம்; உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்வு காண்போம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை, டாக்டர்கள் ஏற்காததால், பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 'உடனே சட்ட சபையில், சட்ட முன்வடிவு கொண்டு வர வேண்டும் என்ற, எங்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எனவே, போராட்டம் தொடரும்' என, அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதனால், அரசு மருத்துவ மனைகளில், புறநோயாளி கள் பிரிவிற்கு சிகிச்சைக்கு வருவோர், திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நோயாளிகளை அல்லாட வைப்பது சரியா? : 'டாக்டர்களின் போராட்டம் நியாயமானது என்பதில், மாற்று கருத்து இல்லை. ஆனால், அரசு மருத்துவமனைகளுக்கு, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, அவர்கள் அல்லாட வைப்பது சரியா' என, சமூக ஆர்வலர்களின் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு டாக்டர்கள் அளித்த பதில்: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில்: தமிழகத்தில், ௧௮ ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் போராடவில்லை; மிக குறைவானோர், உரிமைக்காக போராடுகின்றனர். புறநோயாளிகள் பிரிவில், சிகிச்சை பாதிக்கக் கூடாது என்பதில், உறுதியாக உள்ளோம். போராட்டத்திற்கு வராத டாக்டர்கள், சிறப்புக்கவனம் செலுத்துகின்றனர். நோயாளிகள் அல்லாடுவதாக கூறுவது சரியல்ல. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்க நிர்வாகி ராமலிங்கம்: நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி, போராட்டம் நடத்துகிறோம். எங்கள் போராட்டம், நீதிமன்றத்துக்கு எதிரானது இல்லை. எங்களின் உரிமைகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காவே போராடுகிறோம். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக, தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...