Friday, April 20, 2018

உடலில் தொங்கும் 18 கிலோ கட்டிகள்; 34 ஆண்டுகளாக தவிக்கும் மலைவாசி

Updated : ஏப் 20, 2018 00:57 | Added : ஏப் 19, 2018 23:10



  தர்மபுரி : உடலில் தொங்கும், 18 கிலோ கட்டிகளுடன், மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், 34 ஆண்டுகளாக அவதிப்படுகிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, மலை கிராமமான போடாரங்காட்டைச் சேர்ந்தவர் பழனிசாமி, 46.இவருக்கு, 12 வயதில் இருந்து, தாடை, கழுத்தின் பின் பகுதி, கைகளின் மணிக்கட்டு அருகே என, எட்டு கட்டிகள் வளர துவங்கின. அதிர்ச்சியடைந்த பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் கொடுத்தனர்.

குணமாகாமல், கட்டிகள் வளர்ந்த நிலையில், பழனிசாமிக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டது. உடலில் கட்டிகளுடன் பயணிக்க முடியாததால், மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். எந்த பணிக்கும் செல்லாத நிலையில், உதவித்தொகை கேட்டு, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம், மனு கொடுத்தும், பலனில்லை. இந்த பிரச்னையால், பழனிசாமிக்கு திருமணமும் ஆகவில்லை. சகோதரர்கள் தயவில் வாழ்ந்து வருகிறார்.

பழனிசாமி கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம், உதவித்தொகை வழங்கா விட்டாலும் பரவாயில்லை; உடலில் உள்ள கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், என் சொந்தக் காலிலேயே நின்று, பிழைத்துக் கொள்வேன்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025