Wednesday, August 1, 2018


சமூகவலைதளத்தில் பொது மக்கள் ஆதார் எண்ணை வெளியிடக் கூடாது: யுஐடிஏஐ எச்சரிக்கை

By DIN | Published on : 01st August 2018 02:30 AM |

சமூகவலைதளம் மற்றும் இணையதளத்தில் பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணை வெளியிடக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரித்துள்ளது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ். ஷர்மா, சுட்டுரையில் அண்மையில் தனது ஆதார் எண்ணை வெளிப்படையாக வெளியிட்டு, அதன்மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். இதை சவாலாக எடுத்துக் கொண்ட சிலர், ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து, அவரது செல்லிடப் பேசி எண், பான் எண், வங்கி கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை வெளியிட்டனர். ஆனால், இது உண்மையில்லை என்று ஷர்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆதார் தகவலை பராமரித்து வரும் இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் செவ்வாய்க்கிழமை ஒர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணையோ, பிறரின் ஆதார் எண்களையோ இணையதளம் மற்றும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு, பிறருக்கு சவால் விடுப்பதை தவிர்க்கவும். இது சட்டத்துக்கு எதிரான செயலாகும்.
இதேபோல், பிறரின் ஆதார் தகவலை மற்றவர்கள் ஏதேனும் நோக்கத்துக்கு பயன்படுத்துவதும் ஆதார் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின்கீழ் குற்றமாகும்.

இது மோசடி நடவடிக்கையாக கருதப்படும். இதை மீறி, பிறரின் ஆதார் தகவலை யாரேனும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்டரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024