Tuesday, June 26, 2018

அண்ணாமலை பல்கலைக்கழகம்: யூஜிசி அறிவிப்புக்குத் தடை!


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியை நடத்தக் கூடாது என்ற யூஜிசி அறிவிப்புக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் அதன் பதிவாளர் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில்...

தொலைதூரக் கல்வி நடத்துவதில் தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, உயர் கல்வியை ஊக்கப்படுத்த 259 வகையான படிப்புகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு தொலைதூரக் கல்வி நடத்துவதற்கு சில விதிமுறைகளை வகுத்தது. அதன்படி தொலைதூரக் கல்வி நடத்தும் பல்கலைக்கழகங்கள் பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக மையங்களை அமைக்க வேண்டும். அதில் போதுமான பயிற்சி வழங்கும் ஆசிரியர்கள், நூலகம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றி மற்ற மாநிலங்களில் 18 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 73 மையங்களும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான அனுமதியை வருடா வருடம் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் பெற்றுவரும் நிலையில் தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவானது, பல்கலைக்கழகங்களின் நாக் ஸ்கோர் 3.26 புள்ளிகள் இருந்தால் மட்டுமே தொலைதூரக் கல்வி இயக்கத்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகம் 3.00 புள்ளிகளுடன், நாக் கமிட்டியின் ஏ-கிரேட் அந்தஸ்து பெற்றிருந்தபோதும், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய உத்தரவால் இந்தக் கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி இயக்ககத்துக்கு அனுமதி சேர்க்கை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே 2018-19 ஆண்டுக்கான தொலைதூரக் கல்வி நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (ஜூன் 25) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது யூஜிசி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்து அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். வழக்கு குறித்து யூஜிசி, மத்திய அரசு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...