Friday, April 17, 2015

சாஸ்த்ரா பல்கலை.க்கு எதிரான புகாரை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு எதிராக தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த புகாரை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வி.ஸ்ரீனிவாசராவ், எஸ்.வெங்கடராமன், கே.ரமேஷ், ஸ்ரீனிவாச மூர்த்தி ஆகிய நான்கு பேரும் சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி அகாதெமியில் (சாஸ்த்ரா பல்கலை.) கடந்த 2010, ஜூன் மாதம் பி.டெக். படிப்பில் சேர்ந்தனர். இரண்டாவது ஆண்டு தொடக்கத்தில் வேறு கல்லூரியில் சேர இருப்பதாகக் கூறி மாற்றுச் சான்றிதழை கல்லூரியில் நான்கு பேரும் கேட்டனர்.

கல்விக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு நான்கு பேரின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் அளித்தது.

இந்த நிலையில் நாங்கள் கல்விக் கட்டணமாகக் செலுத்திய மொத்தப் பணத்தையும் திரும்பத் தருமாறு கல்லூரியிடம் கேட்டனர். கல்லூரி நிர்வாகம் தராததால், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நான்கு பேரும் புகார் அளித்தனர்.

அதில், "எங்கள் கல்வியின் முழுக்கட்டணத்தையும் பெறுவதற்கு கல்லூரிக்கு அதிகாரம் இல்லை. மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடையில் நின்றால் அவர்களது உண்மையான சான்றிதழை கல்லூரி நிர்வாகம் திருப்பித் தராமல் கல்வியின் முழுக் கட்டணத்தையும் செலுத்துமாறு வற்புறுத்துகின்றனர். இது சட்ட விரோதமானது' என்று புகாரில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகாரை ரத்து செய்யக் கோரியும், அந்தப் புகாரை விசாரணை செய்வதற்கு நுகர்வோர் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் பல்கலைக்கழகம் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனம். ஒரு மாணவர் தான் படிக்கும்போது, கல்லூரியிலிருந்து இடையிலேயே விலகினால் அவரிடமிருந்து முழுக் கட்டணத்தையோ அல்லது குறிப்பிட்ட ஆண்டுக்கான கட்டணத்தையோ பெறுவதற்கு கல்லூரி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. இந்த வழக்கில் பல்கலைக்கழகத்துக்கு எதிராக மனுதாரர் அளித்த புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை. சட்டப்படியும், உண்மையின் அடிப்படையிலும் அந்தப் புகார் தகுதியானது அல்ல.

எனவே, தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுதாரரின் புகார் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் இரண்டாவது பருவத் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்திய தேதியிலிருந்து மூன்று நாள்களுக்குள் அவர்களது சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...