Monday, April 20, 2015

அரண்மனைக் காசு படுத்தும் பாடு

அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றினார் என்ற தலைப்பில் அடிக்கடி செய்திகள் உலா வருவதைப் பார்த்திருக்கிறோம்.

எத்தனையோ ஊழல் முறைகேடுகள் குறித்த செய்திகளைப் போன்று இதையும் காலப்போக்கில் மறந்தும் இருக்கிறோம்.ஆனால், சமீபத்தில் படித்த, கேட்ட ஒரு செய்தி மனதைப் பிசைவதாக இருக்கிறது.

அரசு வேலை வாங்கித் தருவதாக மாற்றுத் திறனாளிகளை நம்ப வைத்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் சிலர் பணம் வசூலித்து ஏமாற்றிப் பின்னர் சிக்கிக் கொண்டதே அந்தச் செய்தி.

சிக்கிய கும்பலில் ஒருவர் தன்னை ஒரு மாவட்ட ஆட்சியர் என்று கூறிக் கொண்டு, வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதுபோல் நாடகமாடி அந்த மாற்றுத் திறனாளிகளை நம்ப வைத்திருக்கிறார்.

பொதுவாக, ஒருவர் எவ்வளவு கொடியவராக இருந்தாலும், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் போன்றவர்களிடம் சற்று இரக்கம் காட்டுபவர்களாகவே இருப்பார்கள்.

இன்னும் சொல்லப் போனால் திரைப்படக் கதாநாயகர்கள்கூட கொள்ளையர்களாகவே இருந்தாலும், ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் உதவி செய்பவர்களாகவே சித்திரிக்கப்படுகிறார்கள்.

ஆனால், அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மாற்றுத் திறனாளி இளைஞர்களிடம் மோசடி செய்தவர்களை இரக்கமற்ற பாவிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இச்செய்திக்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. அதையும் நாம் ஆராய வேண்டியிருக்கிறது.

முழு உடல்திறன் உள்ளவர்களானாலும் சரி, மாற்றுத் திறனாளிகளானாலும் சரி, எதற்கு ஓர் அரசு வேலைக்காக இப்படி ஏங்க வேண்டும்? லஞ்சம் கொடுத்து, முறையற்ற வழியிலாவது ஏன் அரசு வேலையில் அமர்ந்துவிடத் துடிக்க வேண்டும்?

தனியார் துறைப் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு, நேர்காணல் போன்றவற்றில் காட்டும் திறமையே போதுமானதாக இருக்கிறது. அப்பணிகளுக்கு முயலுபவர்கள் எவரும் பெரிய அளவில் பணம் கொடுப்பதாகவோ, ஏமாறுவதாகவோ நாம் கேள்விப்படுவதேயில்லை.

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கொடுப்பது பழைய சொலவடையாகும். அரைக் காசானாலும் அரண்மனைக் காசு என்பதே அந்தச் சொலவடை.

அரசாங்க வேலையில் சம்பளம் குறைவானாலும்கூட, அதனால் கிடைக்கும் கெளரவமும் மதிப்பும் அதிகம் என்பதே அதன் உள்பொருள்.

தற்காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டிலும் வேலை செய்பவர்களுக்குக் குறைவான சம்பளம் என்று கூறிவிட முடியாது. வேலையின் நிரந்தரத்தன்மை, சமூக மதிப்பு ஆகிய இரண்டுமே அரசு வேலையின் கவர்ச்சி அம்சங்கள் என்று எளிதாகக் கூறி விடலாம்.

நீண்ட காலத்துக்கு முன்பு, சிறப்பாக இயங்கிவந்த பி அன்ட் சி மில் போன்ற பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

சமீபத்தில் ஒரு பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தன்னுடைய ஆயிரக்கணக்கான மூத்தப் பணியாளர்களை திடீரென்று வெளியேற்ற முயற்சித்ததை அறிவோம். அவர்களைவிடக் குறைந்த சம்பளத்தில் புதிய பணியாளர்களை அமர்த்தித் தனது லாபத்தை உயர்த்திக் கொள்ள அந்நிறுவனம் விரும்பியது.

அதேபோன்று, ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனமும், அதற்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனமும் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள்.

தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தால் மூடப்படும்போது பெருமளவில் பணியாளர்கள் வேலை இழந்து திகைத்து நிற்கின்றனர். அவர்களது குடும்பம் சொல்லொணாத் துயருக்கு ஆளாகிறது. பிள்ளைகளைப் படிக்கவைக்கவும், திருமணம் செய்துவைப்பதற்கும் அவர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.

அரசுத் துறைப் பணிகளில் இது போன்ற ஆபத்துகள் இல்லை. சட்டப்பூர்வமாக ஓய்வு பெறும் வயது வரும் வரை பணிப் பாதுகாப்பும், அதன் பிறகு ஓய்வூதியப் பயன்களும் இருக்கின்றன. பெரும் முறைகேடுகளில் சிக்காத எந்த ஓர் அரசு ஊழியரும் இந்த விஷயத்தில் தைரியமாக இருக்கலாம். சம்பளமும் முன்பை விடப் பரவாயில்லை.

இதையெல்லாம் மீறி, அரசு வேலையில் இருக்கின்ற இன்னொரு கவர்ச்சி அம்சம் "கிம்பளம்' என்று சொல்லப்படுகிறது.

அரசாங்கம் தரும் எந்தவொரு சலுகையையும் மக்கள் பெறுவதற்கு, ஜாதிச் சான்றிதழ் தொடங்கிப் பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. அரசு முத்திரையுடன் கூடிய ஓர் அரசு அலுவலரின் கையெழுத்து பொது மக்களின் தலையெழுத்தையே நிர்ணயிக்கவல்லது.

அரசு சலுகைகளை அதற்கான தகுதியின்றிப் பெற முயல்வோர் அதற்காகப் பணம் செலவழிக்கத் தயார் என்ற நிலையில், தகுதியுள்ளவர்களும் செலவழித்தால்தான் காரியம் ஆகும் என்ற நிலை பரவலாக உள்ளது. ஆனால், "கிம்பளம்' எதிர்பார்க்காத நேர்மையான ஊழியர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பணம் செலவழித்தாலும் வேலை உடனடியாக நடைபெற வேண்டும் என்ற பொது மக்களின் பொறுமையின்மைதான், அரசு வேலைக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டுகிறது. அரசு வேலை கிடைப்பதற்கு முதலில் செலவழித்துவிட்டுப் பிறகு சம்பாதித்துவிடலாம் என்ற மனோபாவமே இவ்வாறு ஏமாறுகிறவர்களையும், ஏமாற்றுபவர்களையும் உருவாக்குகிறது.

சொந்தக் காசை முதலாகப் போட்டு, அந்தச் செலவை அரண்மனைக் காசால் ஈடுகட்டிவிடலாம் என்ற எண்ணத்தை மக்களின் மனத்திலிருந்து அடியோடு ஒழித்துக் கட்டினால் ஒழிய, இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறவே செய்யும்.

பணம் கொடுத்து அரசுப் பணியில் சேர முடியாது என்ற தெளிவையும், பணியில் சேர்ந்த பின் "கிம்பளம்' பெறவே முடியாது என்ற சூழலையும் உருவாக்குவது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...