Saturday, April 1, 2017

பஸ்கள், ரேஷன் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

நெல்லை- புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பல்வேறு தரப்பினரும் வாங்க மறுத்து வருகின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி பல முறை அறிவித்தும் இந்த குழப்பம் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், போக்குவரத்து துறை ஆணையர், மின் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் புழங்கும் அனைத்து அரசு தொடர்பான அலுவல்களுக்கும் பெற்றுக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ள அரசுத் துறைகள், அதாவது அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம், மின் கட்டணங்கள் வசூல், ரேஷன் கடைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் தரும் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீங்குவதுடன், அது தொடர்பான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், உணவு வழங்கல் துறை மற்றும் மின் வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024