Thursday, July 12, 2018

கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் த‌மிழகத்துக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு

Published : 12 Jul 2018 07:24 IST


இரா.வினோத் பெங்களூரு
 



காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையின் முழுத் தோற்றம். - (கோப்புப் படம்)

கர்நாடகாவில் கனமழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள‌தால் தமிழகத்துக்கு விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில‌த்தில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அரபிக்கடலோர மாவட்டங்களிலும் மலநாடு பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தட்சின கன்னடா, வட கன்னடா, உடுப்பி, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மங்களூரு, பட்கல், சுள்ளியா, தீர்த்தஹள்ளி உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள் ளன.

இதேபோல‌ காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா, ராம்நகர், பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களி லும் தொடர்ந்து இரவு பகலாக ம‌ழை பெய்து வருகிறது.

குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் நேற்று பெய்த பலத்த மழையால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்தது.

கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம், வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த கனமழையால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் (கேஆர்எஸ்), கபினி, ஹாரங்கி, ஹேமா வதி உள்ளிட்ட 4 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கபினி, ஹாரங்கி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கிவிட்டன. கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் 115 அடியை தொட்டுள்ளது.

தமிழகத்துக்கு தொடர் நீர் திறப்பு

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மாண்டியா மாவட்டத்தில் 124 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.20 அடியாக உயர்ந்திருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 35,980 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 3,612 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரத்தில் உள்ள‌ ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,857.22 அடியாக உயர்ந்திருக்கிறது. இந்த அணைக்கு விநாடிக்கு 14,973 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 12,388 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி உயரத்தில் உள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,912.50 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று 20,535 கனஅடி நீராக அதிகரித்தது. இதனால் விநாடிக்கு 3,100 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2282.22 அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 40,363 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் 39,667 கனஅடி நீர் மதகுகள் மூலம் திறக்கப்பட்டுள் ளது.

அதிகபட்ச நீர் திறப்பு

கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் இருந்து மைசூரு, மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்குப்போக, விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட் டுள்ளது.

நிகழாண்டில் அதிகபட்சமாக 55 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024