Monday, July 30, 2018

ஆவணம் வழங்க மறுத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

Added : ஜூலை 29, 2018 23:54

சென்னை: அசல் ஆவணம் வழங்க மறுத்த தனியார் வங்கி, வாடிக்கையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், சாந்தோமை சேர்ந்த, சுதா தாக்கல் செய்த மனு: சாந்தோமில் உள்ள தனியார் வங்கியில், 2008ம் ஆண்டு, வீட்டு கடன், 2.75 லட்சம் ரூபாய் வாங்கினேன். இதற்காக, சொத்துக்கான அசல் ஆவணங்களை அடமானமாக கொடுத்திருந்தேன். தவணை தொகை முழுவதும் செலுத்தி, கடன் கணக்கு முடித்த பின்னும், அசல் ஆவணங்களை வங்கி தர மறுக்கிறது. இதனால், என் இடத்தை, எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாத நிலை உள்ளது. அசல் ஆவணங்களை திருப்பி தருவதுடன், ஐந்து லட்சம் லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில், கோரியிருந்தார். வழக்கு விசாரணையில், 'அசல் ஆவணங்கள், எங்களிடம் இல்லை. முறைப்படி, உரிய துறைக்கு விண்ணப்பித்து, ஆவணங்கள் வாங்கி கொள்ள ஏற்பாடு செய்தும், மனுதாரர் ஒப்புக்கொள்ளவில்லை. எங்கள் சேவையில் குறைபாடு இல்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, வங்கி நிர்வாகம் தெரிவித்தது.இந்த வழக்கில் நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவு:வங்கியின் சேவையில் குறைபாடு உள்ளது. வங்கி நிர்வாகம், அசல் ஆவணத்தை, மனுதாரருக்கு வழங்குவதுடன், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024