Tuesday, July 31, 2018

மருத்துவப் படிப்பைக் கைவிட்டு பி.இ. படிப்பில் சேர்ந்த 3 மாணவர்கள்

By DIN | Published on : 31st July 2018 02:26 AM

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு முதல் சுற்று முடிவில் மூன்று மாணவர்கள் தங்களுடைய மருத்துவப் படிப்பு இடங்களை ஒப்படைத்து விட்டு, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளனர்.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு கடந்த புதன்கிழமை தொடங்கியது. 5 சுற்றுகளாக இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பி.இ. முதல் சுற்று மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று மாணவர்களுக்கான இடங்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இரண்டாம் சுற்றில் 20,000 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதன்கிழமை (ஆக.1) மாலை 5 மணி வரை தங்கள் விருப்ப இடங்களை ஆன்-லைனில் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.
முதல் சுற்றில் 6,768 பேர் சேர்க்கை: கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த 7,303 பேரில் 7,136 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 6,768 பேருக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கல்லூரி சேர்க்கைக் கடிதத்தை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும்.

மருத்துவப் படிப்பை கைவிட்ட 3 பேர்: மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று எம்.பி.பி.எஸ். படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள், அதைக் கைவிட்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பினால், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்து தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்த பிறகு ஒரு நாள் உள்ள கால அவகாசத்துக்குள் ஏதாவது ஒரு உதவி மையத்தில் தங்களுடைய எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு உத்தரவை ஒப்படைத்துவிடவேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

அந்த வகையில், முதல் சுற்று பி.இ. கலந்தாய்வு முடிவில் 3 மாணவர்கள் தங்களுடைய எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பி.இ. இடங்களைத் தேர்வு செய்து இறுதி ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024