Saturday, June 29, 2019

இணைய நேரலை முறையில் பட்டமளிப்பு: மாநிலத்தில் முதன்முறையாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. ஏற்பாடு

By ஆ.கோபிகிருஷ்ணா | Published on : 29th June 2019 05:09 AM



தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இம்முறை இணையவழி நேரலை முறை மூலம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.அதன்படி, விழா நடைபெறும் அரங்கத்துக்கு வெளியேயும், பிற இடங்களிலும் உள்ள மாணவர்களுக்கு ஆளுநர் காணொலிக்காட்சி வாயிலாக பட்டங்களை வழங்க உள்ளார். தமிழகத்தில் இதுபோன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளின் மூலம் பட்டமளிப்பு விழா நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். 

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்புகள், மருத்துவம் சார்ந்த பிற படிப்புகள் என நூற்றுக்கணக்கான படிப்புகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது படிப்புகளை நிறைவு செய்கின்றனர். அந்த வரிசையில் நிகழாண்டில் 22,929 மாணவர்கள் பட்டப் படிப்புகளை முடித்துள்ளனர். அவர்களுக்கு சனிக்கிழமை (ஜூன் 29) சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

பொதுவாகவே, மருத்துவம் மற்றும் அதைச்சார்ந்த படிப்புகளை நிறைவு செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பதால் அவர்கள் அனைவரையும் ஒரே அரங்கில் அமரச் செய்து பட்டங்களை அளிக்க இயலாது. அந்த அளவுக்கு இருக்கைகள் கொண்ட அரங்குகளும் எங்கும் இல்லை. 

இதனால், சில ஆயிரம் மாணவர்களை மட்டும் பட்டமளிப்பு விழாவில் பங்குபெறச் செய்வது வழக்கம். பிறருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் வாயிலாக பட்டங்கள் அளிக்கப்படும்.

இந்நிலையில், நிகழாண்டு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் 4,745 மாணவர்கள் நேரடியாக கலந்துகொள்கின்றனர். விழா நடைபெறும் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் அத்தனை பேரும் அமர முடியாது என்பதால் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் தற்காலிக அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
அதேபோன்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அரங்கிலும் மாணவர்களில் ஒரு பகுதியினர் அமர வைக்கப்பட உள்ளனர். இந்த மூன்று இடங்களிலும் உள்ள மாணவர்களையும் ஒருங்கிணைப்பதற்கு இணையவழி நேரலை முறை பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி, 5 கேமராக்கள் மூலமாக நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டு மூன்று இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 5 திரைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். 

இதன் மூலம், சென்னைப் பல்கலைக்கழக அரங்க மேடையில் உள்ள ஆளுநர், மருத்துவப் பல்கலைக்கழக அரங்கங்களில் அமர்ந்திருக்கும் மாணவர்களை காணொலிக்காட்சி வாயிலாக பார்த்து பட்டங்களை அளிப்பார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களும் ஆளுநர் முன்னிலையில் பட்டமேற்பு உறுதிமொழியை ஏற்பார்கள். இதற்கு முன்பு வரை எந்தப் பல்கலைக் கழகத்திலும் இத்தகைய நவீன தொழில்நுட்ப முறையில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டதில்லை. ரூ.6.5 லட்சம் செலவில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:

பட்டமளிப்பு விழாவில் ஆன்லைன் மூலம் மாணவர்களை இணைப்பதற்காக தேசிய அறிவுசார் இணையமானது (என்கேஎன்) இலவசமாக இணைய சேவைகளை வழங்கியுள்ளது. இதைத் தவிர பிஎஸ்என்எல் சேவையும் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை பல்வேறு புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 

மாணவர்களை ஒருங்கிணைக்கும் நெறி மேலாண்மை நடவடிக்கைகளில் ஊர்க் காவல் படையினர் 50 பேரை ஈடுபடுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
இணையவழி நேரலை நடவடிக்கைளிலும், விழா ஏற்பாடுகளிலும் பல்வேறு நபர்களின் பங்களிப்பு உள்ளது. குறிப்பாக, தேசிய தகவல் மையத்தைச் சேர்ந்த கோபிநாத், சென்னைப் பல்கலைக்கழக இணையப் பொறியாளர் சிவாஜி, மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஒளிப்பதிவுக் குழுவைச் சேர்ந்த சம்பத், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சுகுமார், பார்த்திபன், மருத்துவப் பல்கலைக்கழக கணினி பகுப்பாய்வாளர்கள் ராஜலட்சுமி, சண்முகம், இணையப் பொறியாளர் மன்மோகன் உள்ளிட்டோரின் பணிகள் இன்றியமையாதவை என்றார் அவர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...