Thursday, May 24, 2018


நெல்லை, குமரி, தூத்துக்குடியில் இண்டெர்நெட் முடக்கம்: வதந்தி பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை

Published : 23 May 2018 19:30 IST

சென்னை
 



இண்டெர்நெட் முடக்கம்- சித்தரிப்பு படம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.

இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். இந்தியாவையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தேசிய அரசியல் தலைவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இரண்டாம் நாளான இன்றும் வன்முறை வெடித்தது. இன்றும் போலீஸார், பொதுமக்கள் மோதல் கலவரமாக மாறியதில் போலீஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுதும் தன்னெழுச்சியாக பொதுமக்கள் அரசியல் இயக்கங்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லையிலும், கன்னியாகுமரியிலும் பல போராட்டங்கள் நடந்தன. மீனவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போரட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர தூத்துக்குடியின் அண்டை மாவட்டமான நெல்லை, கன்னியாகுமரியிலும் கலவரம் பரவாமல் இருக்க நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இணையதள (இன்டெர்நெட்) சேவையை தமிழக அரசு முடக்க உள்ளது.

உள்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது இணையதள சேவையை இம்மூன்று மாவட்டங்களில் முடக்க உள்ளன. இன்றிரவு 9 மணி முதல் இணையதளங்கள் முடக்கப்படும் என தெரிகிறது.

துப்பாக்கி சூடு குறித்தும், போராட்டம் குறித்தும் வதந்தி பரப்புவதை தடுக்கவும், வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாற்றத்தை முடக்கவும் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. எத்தனை நாட்களுக்கு இந்த சேவை முடக்கப்படும் என தெரியவில்லை.

இதற்கு முன்னர் காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் இணையதள சேவையை அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் முடக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு. காஷ்மீரில் இது அடிக்கடி நடக்கும். தமிழகத்தில் இணையதள சேவை வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...