Saturday, July 21, 2018

5 நாள் மண வாழ்க்கையில் ஏமாற்றம்; கணவனை அடித்து உதைத்த மனைவி: ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்ததால் ஆத்திரம்

Published : 19 Jul 2018 18:12 IST

கோவை

 

சரமாரியாக தாக்கும் புதுமணப்பெண்

மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை அந்த இளம்பெண் சரமாரியாகத் தாக்கினார். கையை முறுக்கி முகத்தில் குத்தியபடி திட்டிக் கொண்டிருந்தார்.

அடிவாங்கியபடி எதிர்க்க முடியாமல் அந்த இளைஞர் அழுதுகொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிரித்தபடி சென்றனர். சிலர் செல்போனில் படம் எடுத்தனர். சிலர் தடுக்க முயன்றபோது இளம்பெண் கூறிய காரணத்தைக் கேட்டு “போடு இன்னும் ரெண்டு போடு” என்று இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசிவிட்டுச் சென்றனர்.

கணவரைத் தாக்கிய இளம்பெண் ஐந்து நாட்களுக்கு முன்னர் தனது வீட்டார் எதிர்ப்பையும் மீறி தனது காதலரைக் கரம் பிடித்துள்ளார். அந்த மகிழ்ச்சியில் 5 நாள் மண வாழ்க்கை வாழ்ந்த தம்பதியர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கணவரின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தியிருப்பதை புது மணப் பெண் கவனித்திருக்கிறார்.

அது பற்றிக் கேட்டபோது கணவர் மறைத்துள்ளார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி பிரிந்துசென்று விட்டார் என்கிற தகவலைக் கூறியுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து தன்னிடம் பழகி ஏமாற்றியதை அந்த இளம்பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கோபமான அப்பெண் இடத்தில் பொது இடம் என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடித்து வெளுத்துவிட்டார்.

மனைவியிடம் அடிவாங்கி அழுத இளைஞர் மூன்று பெண்களைக் காதலித்ததும், அவர்களில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததும் பின்னர் தெரியவந்துள்ளது.

இதனிடையே பொது இடத்தில் இளம்பெண் ஒருவர் இளைஞரை அடிப்பதாக போலீஸாருக்கு சிலர் போன் செய்து தகவல் சொல்ல சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளம்பெண் தாக்குதலிலிருந்து அழுதுகொண்டிருந்த இளைஞரை மீட்டனர்.

“என்ன செய்ததால் அந்தப் பெண் உன்னை இந்த அடி அடிக்குது” என்று போலீஸார் கேட்க “நான் என்ன சார் செய்தேன், அவள் என் மனைவி அவள்தான் என்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறார்” என்று கூறிய கணவன் “நல்லவேளை சார் வந்து காப்பாற்றினீர்கள்” என்று கூறியுள்ளார்.

“ஏம்மா புருஷனைப் போட்டு அடிப்பதை எல்லாம் வீட்டுக்குள் வைத்துக்கொள். பொது இடத்தில் இவ்வாறு செய்யக்கூடாது. அவன் என்ன தவறு செய்தான்” என்று போலீஸார் கேட்டுள்ளனர்.

“ என்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களுடன் பழக்கம் உள்ளது, ஏற்கெனவே திருமணமாகி மனைவியும் இருக்கிறார்” என்று இளம்பெண் கூற, ஏதாவது புகார் இருந்தால் ஸ்டேஷனில் சொல்ல வேண்டும், சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் கணவரை நையப்புடைத்த காட்சியும், கதறி அழும் கணவரை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சியும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தப்பு செய்யும் கணவர்களுக்கு சரியான தண்டனை என சிலர் இளம்பெண்ணைப் பாராட்டியும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024