Saturday, July 7, 2018

`தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா..?' - சி.பி.எஸ்.இயை லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

அருண் சின்னதுரை

ஈ.ஜெ.நந்தகுமார்  vikatan 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ரெங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், ``நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும்" எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையில் சி.பி.எஸ்.இ சார்பாக வழக்கறிஞர் ஆஜராகினர். அவர் பேசுகையில் ``இந்த வழக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக யாரும் வழக்குத் தொடரவில்லை. பொது நலன் வழக்காக மட்டுமே வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்றார்.

அவர்களிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினார். நீங்கள் தவறாக கேள்வி கேட்பீர்கள் பின்னர் அது சரியென்று கூறுவீர்களா. சி.பி.எஸ்.இ சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறதா. தவறான கருத்துகளை சரியாக்க முயற்சி செய்ய வேண்டாம். இராகத்துக்கு நகம் என்றும், இடைநிலை என்பதற்குப் பதிலாக கடைநிலை என்றும், இரத்த நாளங்கள் என்பதற்குப் பதிலாக இரத்தம் நலன் என்றும் தவறாக கேட்கப்பட்டுள்ளது மிகவும் தெளிவாக தெரிகிறது. பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியதை விடத் தேர்ச்சி பெற்றவர்கள் எப்படி அதிகரிக்கப்பட்டது. கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாகத் தரவரிசை பட்டியல் வெளியிட்டது ஏன். இவ்வாறு நீங்கள் தவறு செய்தது தெளிவாகத் தெரிகிறது. இதுதான் ஜனநாயகமா. இல்லை சர்வாதிகாரமா செயல்படுவதா. தவறான கேள்விகள் இருக்கும்போது எப்படிச் சரியான பதிலை எதிர்பார்ப்பீர்கள். இதனால் தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா? மாணவர்கள் நலன் கருதி சி.பி.எஸ்.இ செயல்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். மொழி மாற்றம் எவ்வாறு செய்தீர்கள்? எந்த டிக்ஸ்னரி பயன்படுத்தப்பட்டது என்று கேள்வி கேட்டனர். பின்னர் இரு தரப்பு வாதங்களைக் கேட்டு பின் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024