Saturday, July 7, 2018

நன்னிலம், திருவெண்காடு, திருப்பாம்புரம்... போதைப் பழக்கங்களிலிருந்து மீள உதவும் கோயில்கள்!



மு.ஹரி காமராஜ்  vikatan 

போதை பழக்கத்தில் இருந்து விடுபட கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆலயங்களைக் கூறும் கட்டுரை இது!




நாளுக்கு நாள் பெருகிவரும் போதைக் கலாசாரம் பெரும் கவலைக்கு உரிய விஷயமாகிவருகிறது. தமிழ்நாட்டில் மது அருந்துவோர், புகைபிடிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. மது மற்றும் புகையிலை உபயோகிப்போரின் சராசரி ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறது. 13 வயதில் புகைபிடிப்பதும், 15 வயதில் மது அருந்துவதும் இங்கு சர்வ சாதாரணமாகி வருகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரமும், கையில் புழங்கும் தாராளமான பணமும்தான் இதற்குக் காரணம். போதைப் பழக்கத்தால் நாடும் வீடும் சீரழிந்து வரும் இந்த வேளையில், கொடுமையான இந்தப் பழக்கத்தில் இருந்து மீள ஆன்மிகமும் தனக்குரிய பங்கினை அளித்தே வருகிறது. சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியும், பெரியவர் மீதான மரியாதையும், குருவின் நல்ல வழிகாட்டலும் உள்ளவர்கள் போதையின் பாதையில் விழுவதே இல்லை. நல்லவர்கள் தொடர்பே இல்லாதவர்கள்தான் இந்தப் பாழுங்குழியில் விழுந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். ஆரம்பத்திலேயே உங்கள் பிள்ளைகளை நன்னெறி சொல்லிக்கொடுத்து ஆன்மிகச் சூழலில் வளர்த்து வருவதே வருமுன் காப்பதாகும். இப்படி போதைக்கு அடிமையான பலர், அதிலிருந்து மீள ஆன்மிகரீதியான வழிமுறைகள் எதுவுமிருக்கிறதா என்று அறிய திருநள்ளாறு கோட்டீஸ்வர சிவாசார்யரைத் தொடர்புகொண்டோம்.



மனிதனை நல்வழிப்படுத்துவதுதான் ஆன்மிகம், ஆலய வழிபாடு எல்லாம். மனிதனை பக்குவப்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்த்தும் பணியையே ஆன்மிகம் செய்திருக்கிறது எனும்போது தீய பழக்கங்களை ஒழிப்பது என்பது எளிதான வேலையே. ஆண்டவனை நம்புபவர்கள் மன திடத்தோடு இருக்க வேண்டும். மனதை வென்றவர்கள் ஆண்டவனின் அருகிலேயே இருக்கிறார்கள் எனலாம். விரதம், சத்தியம் எல்லாம் நல்லவற்றைத் தொடரத்தான். சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் ஒரு மண்டலம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இருப்பதில்லையா? காரணம், ஆண்டவன் விஷயத்தில் ஒழுக்கத்தை மீறினால் பெரும் குற்றம் என்ற பயம். குடும்பத்துக்கு ஏதும் தீங்கு வருமோ என்ற அச்சம்தான் விரத காலங்களில் ஒருவனை போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறது என்றால் அந்த தெய்வ நம்பிக்கை நல்லதுதானே? மனதை உறுதியாக்கி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வழிப்படுத்தும் பூஜா முறைகள் எல்லாமே நன்மை தரும். பைரவர் போன்ற உக்கிரத் தெய்வங்களின் மீது சத்தியம் செய்பவர், தனது ஒழுக்கத்தை கடைபிடிப்பது வழிபட்டால் மட்டுமல்ல, உக்கிர தெய்வத்தின் மீது சத்தியம் செய்திருக்கிறோம் என்ற பயத்தினாலும்தான்.



செவ்வாய் உடலின் ரத்தத்துக்கு அதிபதி. அந்த ரத்தம் கெட்டுப்போக செவ்வாய் நீச்சமாவதும் காரணம். அதுபோல குருபகவான் நல்ல ஒழுக்கத்துக்கு காரணகர்த்தா. குருவருள் இல்லாவிட்டால் கெட்ட சேர்க்கை உண்டாகி தீய பழக்கங்கள் உருவாகும். அதைப்போலவே சந்திர பகவான் போகத்தின் கடவுள். இவர்கள் மூவரின் அருள் இருந்தால் ஒருவர் தீய பழக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்பது உண்மை. இதுவரை தவறு செய்தவர்கள் இறைவனருளால் விடுபட்டு நல்வாழ்வு பெற திருக்கோயில்களை சரணடைவது நல்லதே'' என்றார்.
  அமாவாசை, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாள்களில் பைரவருக்கு விளக்கிட்டு, அவருக்கான ஸ்தோத்திரங்கள் சொல்லி போதைப் பழக்கங்களில் இருந்து விடுபட்டவர்களை அநேக சிவாலயங்களில் பார்க்கலாம். தற்போது ஆங்காங்கே பெருகி வரும் நல்ல விஷயம் இது. தவற்றை உணர்ந்து கொள்வதே திருத்திக் கொள்வதின் முதல் படிதானே? இதைக் கடந்து அவரவர் ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி ஆலோசனை பெற்று, இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட சில கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆலயங்களைப் பார்ப்போம்.



திருவெண்காடு: சிவபெருமானின் 64 வடிவங்களில் சிறப்பானவர் அகோர மூர்த்தி. இவர் ஈசனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றி தீயவர்களையும் தீமைகளையும் அழித்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. அகோர மூர்த்தி அருளும் திருத்தலம் திருவெண்காடு. போதைப் பழக்கத்தால் தவிக்கும் ஒவ்வொருவரும் வளர்பிறை திங்கட்கிழமையன்று திருவெண்காடு ஆலயத்துக்குச் சென்று திருக்குளத்தில் நீராடி அகோர மூர்த்தி சந்நிதியில் 108 நெய் விளக்கேற்றி வழிபட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபட விழிப்பு உணர்வு பெற்று ஜாதக ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் பெற்று மெள்ள மெள்ள போதையிலிருந்து மீள்வார்கள் என்கிறார்கள்.



திருப்பாம்புரம்: ராகுவும் கேதுவும் ஒரே உருவாக நின்று ஈசனை நெஞ்சில் நிறுத்தி வணங்கி அருள்பெற்ற தலம் இது. திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் பிரம்மராம்பிகை சமேத சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் தீய பழக்கங்களில் இருந்து விடுபட விசேஷமாகச் சொல்லப் படுகிறது. ஞாயிறுதோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6.00) இங்கு வந்து ஈசனை வணங்கி அர்ச்சித்து 9 முறைகள் வலம் வந்து பலரும் தீய பழக்கங்களில் இருந்து விடுபடுகிறார்கள். போதைப் பழக்கத்தில் இருந்து மட்டுமல்ல, இங்கு வந்து வணங்கினால் 264 வகையான பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்று தல புராணம் சொல்கிறது.

நன்னிலம்: கும்பகோணம்-திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் நன்னிலம் மதுவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விருத்திராசுரனை வெற்றி கொள்ள தேவர்கள் இந்தத் தலத்து ஈசனை வண்டு வடிவில் தேன் மழை பொழிந்து வழிபட்டார்கள். இதனால் ஈசன் மதுவனநாதர் எனப் பெயர் கொண்டார். இங்குள்ள மது தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்.

திருக்களர்: திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் அமைந்த ஊர் திருக்களர். இங்கு வீற்றிருக்கும் அமிர்தவல்லி சமேத பாரிஜாதவனேஸ்வரர் சகல தீய பழக்கங்களில் இருந்தும் விடுபட அருள் செய்பவர். துர்வாச முனிவருக்கு பிரமதாண்டவ தரிசனம் அளித்து ஆசி வழங்கிய இந்த ஈசன் இன்பமே வடிவானவர். இவரைத் தரிசிப்பவர்கள் மற்ற போலியான மயக்க இன்பங்களைத் தவிர்த்து திருந்துவார்கள் என ஆன்றோர்கள் தெரிவிக்கிறார்கள்.

காணிப்பாக்கம்: விஹாரபுரி என்று அழைக்கப்பட்ட காணிப்பாக்கம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் சத்தியமே வடிவானவர். இவருக்கு முன்பாக சத்தியம் செய்துவிட்டு அதை மீறாதவர்களுக்கு அளப்பரிய நலன்களை வழங்குபவர். ஒவ்வொரு நாளும் இங்கு போதைப்பழக்கம் கொண்ட பலரும் வந்து, பிள்ளையாரை வணங்கி 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து பிள்ளையாரின் அருட்பிரசாதமான கிணற்றுத் தீர்த்தத்தை வாங்கி அருந்தி தீய பழக்கத்தில் இருந்து மீள்கிறார்கள். சொன்னபடி செய்யும் பக்தர்களை விநாயகப்பெருமானும் காத்து வருகிறார்.



மேலே சொன்ன ஆலயங்கள் மட்டுமின்றி ஜோதிடரீதியாக நல்ல சிந்தனையை அளித்து பலவீனங்களை ஒழிக்க குருபகவான் ஆலயங்களுக்கு சென்றும், செவ்வாய் அனுக்கிரகம் பெற திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோயில் சென்றும் தீய பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள். முன்ஜன்ம கர்ம வினைகளால் போதையில் விழுகிறவர்கள், சித்தர் சமாதிகளை வணங்கி விடுபடுகிறார்கள். நீர்த்தலமான திருவானைக்கா சென்றும் வழிபடுகிறார்கள். ஆலயங்கள், வழிபாடுகள் மட்டுமின்றி தீய பழக்கங்களில் இருந்து விடுபட தியானம், யோகா, கூட்டு வழிபாடு, பஜனை போன்ற ஆன்மிக விஷயங்களும் பெரிதும் பயன்படுகிறது. தினம்தோறும் சாய்பாபா கோயிலுக்கு சென்று தியானித்து போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் அநேகம் என்று மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சொல்வதை நேரடியாகவே கேட்கலாம்.

வாழ்வைச் சீரழித்து வருங்காலத்தை நாசமாக்கும் போதைப் பழக்கத்தை இறையருளாலும், நல்லவர்களின் தொடர்பாலும் சீக்கிரமே விட்டுவிடுங்கள். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்...!

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024