Friday, July 6, 2018

அதிக வேகத்தில் சென்றதால் அபராதம் கட்டிய கேரள ஆளுநர் சதாசிவம்...!


சி.வெற்றிவேல்

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் அதிக வேகத்தில் சென்றதால் கேரள ஆளுநர் சதாசிவம் அபராதம் கட்டியிருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு கேரளா கவர்னர் மாளிகைக்கு அருகில் இருக்கும் கவுடியார் சாலையில் கேரளா மாநில கவர்னர் சதாசிவத்தின் கார் சுமார் 80 கி.மீ வேகத்தில் சென்றது. அந்த சாலையின் உச்ச பட்ச வாகன வேகம் 55. கி.மீ மட்டுமே. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் கூடுதலான வேகத்தில் சென்றதால் ஆளுநரின் காருக்கு அங்கிருந்த போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அபராதம் விதிக்கப்பட்ட போது ஆளுநர் சதாசிவம் காரில் பயணிக்கவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.



இதுகுறித்து ஆளுநருக்குத் தெரியவந்த போது அபராதத் தொகையான 400 ரூபாயைச் செலுத்திவிட்டு ரசீது பெற்றுக்கொள்ளும்படி ஓட்டுநருக்கு ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆளுநரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட தகவல் போக்குவரத்துத் துறையினர் மூலமாகவே கசிந்திருக்கிறது. சட்ட விதிகள் அனைவருக்கும் பொதுவானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துபடியாக அமைந்திருக்கிறது. ஆளுநரின் கார் என்றபோதும் தயக்கமில்லாமல் அபராதம் விதித்த போக்குவரத்து ஊழியருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024