Sunday, July 8, 2018


இன்று வருகிறார் ரஜினி  அரசியல் பணிகள் ஆரம்பம் 

 
dinamalar 8.7.2018

டார்ஜிலிங்கில் படப்படிப்பை முடித்து, நடிகர் ரஜினி, இன்று சென்னை திரும்புகிறார். மீண்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார்.




கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், புதுப்படத்தில், ரஜினி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மற்றும் அம்மாநிலத்தில் உள்ள மலைப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்ற ரஜினி, படப்பிடிப்பை முடித்து, இன்று சென்னை திரும்புகிறார். நாளை முதல், அரசியல்

பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:ரஜினி மக்கள் மன்றத்திற்கு, தமிழகம் முழுவதும், 70 சதவீத அளவுக்கு, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 100 சதவீதம் பணி முடிவடைந்ததும், அவர்களை அழைத்து, சென்னையில் பேச உள்ளார். ராகவேந்திர திருமண மண்டபத்தில், மாவட்ட வாரியாக, பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், ரஜினி கலந்துரையாடும் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை, 40 லட்சத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.க.,வில், 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வரவுள்ளதால், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், லோக்சபா, சட்டசபை தேர்தல் ஒன்றாக வரும் என்றும், ரஜினியிடம், அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், அரசியல் பணிகளில், மீண்டும் தீவிரம் காட்ட, ரஜினி திட்டமிட்டுள்ளார். 'டிவி' விவாதங்களில், யார் யார் பேச வேண்டும் என்பதற்காக, ஊடகவியல் தொடர்பாளர்கள் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான நிர்வாகிகளை, விரைவில், ரஜினி அறிவிக்க உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024