Sunday, July 15, 2018

அபுதாபியில் இருந்து சவப்பெட்டி அனுப்பியதில் குளறுபடி தமிழகத்தைச் சேர்ந்தவரின் சடலம்: கேரள குடும்பத்திடம் ஒப்படைப்பு

Published : 15 Jul 2018 09:43 IST  the hindu tamil

வயநாடு

அபுதாபியில் இறந்த கேரளாவைச் சேர்ந்தவரின் உடலுக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை மாற்றி அனுப்பிய சம்பவம் ஐக்கிய அரபு அமீரக யுஏஇ நாட்டில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின் ஒத்தோயோத் கொட்டாரன் (29). இவர் யுஏஇ நாட்டின் தலைநகர் அபுதாபியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 5-ம் தேதி இறந்தார். இதேபோல அபுதாபியில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த காமாட்சி கிருஷ்ணன் (39) என்பவர் ஜூலை 7-ம் தேதி இறந்தார். இருவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை.

இந்த நிலையில் நிதின் இறந்த விவரம், அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவரது உடலும் அனுப்பி வைக்கப்படும் என்றுஅபுதாபியில் அவர் பணி செய்து வந்த நிறுவனம் உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தது. சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அது நிதினின் உடல் இல்லை என்பதும் தமிழகத்தைச் சேர்ந்த காமாட்சி கிருஷ்ணனின் உடல் என்பதும் நிதின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து நிதின் குடும்பத்தார், அபுதாபியிலுள்ள நிதின் பணியாற்றிய நிறுவனத்தாரைத் தொடர்புகொண்டனர். அப்போதுதான் நிதின் உடலுக்குப் பதிலாக காமாட்சி கிருஷ்ணன் உடல் கேரளாவுக்கு சென்ற விஷயம் அபுதாபி நிறுவனத்துக்கு தெரியவந்தது.

இதுகுறித்து நிதின் உறவினர் ஒருவர் கூறியதாவது: நிதின் இறந்து ஒரு வாரமான நிலையில் அவரது உடலுக்காகக் காத்திருந்தோம். ஆனால் வேறு ஒருவரின் உடலை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது காமாட்சி கிருஷ்ணனின் உடல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நிதின் உடல் வருவதற்காகக் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த தவறு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. உடல் மாறிய விவகாரம் துரதிருஷ்டவசமானது. நிதின் உடலைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

இதேபோல காமாட்சி கிருஷ்ணன் குடும்பத்தாருடனும் பேசி வருகிறோம். தூதரக நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், கேரளாவில் வைக்கப்பட்டுள்ள காமாட்சி கிருஷ்ணன் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். நிதின் உடலும் அபுதாபியிலிருந்து கொண்டு வரப்படும்” என்றார்.

இதுகுறித்து அபுதாபியிலுள்ள ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ரஞ்சன் தத்தா கூறும்போது, “நிதின் உடல், ஏர் இந்தியாவின் கோழிக்கோடு செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டிருக்கவேண்டும். அதே நேரத்தில் காமாட்சி கிருஷ்ணன் உடல் சென்னை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். உடல்களுடன் அவர்களது உறவினர் ஒருவரும் வந்திருந்தனர். ஆனால் மனிதத் தவறால் இதுபோன்ற தவறு நிகழ்ந்து விட்டது. கோழிக்கோடு விமானத்தில் நிதின் உடலுக்குப் பதிலாக காமாட்சி கிருஷ்ணனின் உடல் ஏற்றப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024