Saturday, January 6, 2018

சார்பதிவாளர் அலுவலகப் பிரின்டரில் மை இல்லை! - பொதுமக்கள் அவதி

ராமேஸ்வரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அச்சுப் பிரதி எடுக்கும் இயந்திரத்தில் கடந்த சில நாள்களாக மை இல்லாததால் வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் நகல்களைப் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராமேஸ்வரம் சார்-பதிவாளர் அலுவலகம்

ராமேஸ்வரத்தில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நிலம் விற்பனை, திருமணப் பதிவுகள், பத்திர நகல் பெறுதல் போன்ற பணிகளுக்கு நாடி வருகின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்களுக்குத் தேவையான நகல்களை எடுக்க மின் அச்சு நகல் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த இயந்திரத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த இயந்திரத்தில் ஏற்படும் பழுதை நீக்குவது, அச்சு மையுக்கான ட்ரம் உள்ளிட்ட பாகங்களை மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ராமேஸ்வரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 1,000 முதல் 2,000 பக்கங்கள் வரை நகல் எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், 60 ஆயிரம் பக்கங்கள் நகல் எடுப்பதற்கான உத்ரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் 30 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே நகல் எடுக்கும் வகையில் இந்த இயந்திரத்தின் தரம் உள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக அச்சு நகல் இயந்திரத்தின் மை தீர்ந்த நிலையில் அதில் இருந்து பெறப்படும் நகல்கள் தெளிவற்றும் அரைகுறையாகவும் வெளிவருகிறது. இதனால் பொதுமக்களுக்குச் சான்றிதழ்கள் வழங்குவது தடைபட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024