Sunday, January 28, 2018

தத்கலில்' பாஸ்போர்ட் பெற அதிகாரிகள் கையொப்பம்... தேவையில்லை! வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை

Added : ஜன 28, 2018 00:16


புனே: விரைவில் பாஸ்போர்ட் கேட்டு, 'தத்கல்' முறையில் விண்ணப்பிப்போர், இனி, முதல் நிலை அரசு அதிகாரிகளின் கையொப்பம் பெற வேண்டிய அவசியம் இல்லை என, வெளியுறவுத் துறை அமைச்சகம்
அறிவித்துள்ளது. இதனால், 'தத்கல்' முறையில் பாஸ்போர்ட் பெறுவது எளிதாகி உள்ளது.

வெளிநாடு செல்வதற்காக, பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர், பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், ஒரு மாதத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

அவசர வேலையாக வெளிநாடு செல்பவர்கள், உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்கு, 'தத்கல்' முறையில் விண்ணப்பிப்பது வழக்கம். இவர்கள், விண்ணப்பித்ததில் இருந்து, மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட்
வழங்கப்படும்.

'தத்கல்' முறையில் விண்ணப்பிப்பவர்கள், தங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும், உண்மையானதா என்பதை உறுதி செய்ய, முதல் நிலை அரசு அதிகாரியின் கையொப்பத்தை பெற்று தர வேண்டும்.

மத்திய, மாநில அரசில், இணை செயலர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் இருப்பவர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், போலீஸ் உதவி கமிஷனர், தாசில்தார் ஆகியோர் முதல் நிலை அரசு அதிகாரிகளாக கருதப்படுகின்றனர்.

இந்நிலையில், 'தத்கல்'முறையின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், முதல் நிலை அரசு அதிகாரியின் கையொப்பத்தை, பெற்றுத் தர தேவையில்லை என, வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்த மாற்றம், நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.

வெளியுறவுத்துறை செயலர், தியானேஷ்வர் முலே, கூறியதாவது:மத்திய அரசு, மக்களை முழுமையாக நம்புகிறது. இதை, அவர்களுக்கு உணர்த்தவே, 'தத்கல்' முறையின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு
விண்ணப்பிப்பவர்கள், முதல் நிலை அரசு அதிகாரியின் கையொப்பத்தை, பெற்றுத் தர தேவையில்லை என றிவிக்கப்பட்டுள்ளது.வெளியுறவுத்துறையின், மக்கள் ஆதரவு நடவடிக்கையில் இதுவும் ஒன்று. 'தத்கல்' திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் அனைவராலுமே, முதல் நிலை அரசு அதிகாரியின் கையொப்பத்தை வாங்கி விட
முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.இனி, 'தத்கல்' முறையில் விண்ணப்பிப்பவர்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய மூன்று ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும்.
இவை உண்மையானது என்று உறுதியளிக்க யாருடைய கையொப்பமும் இனி தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு சலுகை

தினமும், ஒவ்வொரு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்தும் வழங்கப்படும், பாஸ்போர்ட்களில் ஐந்து சதவீதம், 'தத்கல்' முறையில் வழங்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் வழங்குவதில், மாணவர்களுக்கு தனிச் சலுகை இருக்கிறது. ௧௮ வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதாருடன் சேர்த்து, கல்வி நிறுவனம் வழங்கும் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து விண்ணப்பித்தால் போதும்.

வழக்கமான முறையில் விண்ணப்பிக்கும், ௧௮ வயதுக்குட்பட்ட மாணவர்கள், அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்தால், 'தத்கல்'
கட்டணம் இல்லாமலேயே அவர்களுக்கு பாஸ்போர்ட் உடனடியாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...