Monday, July 9, 2018

சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை காட்டி 10 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த 99 வயது தாத்தா போக்சோவில் கைது: தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்

2018-07-09@ 02:31:57

சென்னை: ஆவடி அருகே 10 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை காட்டி, பாலியல் தொல்லை கொடுத்த 99 வயது ‘தாத்தாவை’ போலீசார் கைது செய்தனர். ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்னீர்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் (99). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். தம்பதிக்கு 10 வயதில் மகள் உள்ளார். அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 4ம் தேதி வீட்டின் முன்பு, விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பரசுராமன் அழைத்து சாக்லெட் வாங்கி தரட்டுமா என கேட்டபடி தனது மடியில் அமரவைத்து கொஞ்சுவதுபோல் நடித்துள்ளார்.

பின்னர் திடீரென தனது சில்மிஷ வேலைகளை சிறுமியிடம் காண்பித்துள்ளார். இதன் காரணமாக, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது அந்த தாத்தா என்னை சாக்லெட் கொடுப்பதாக அழைத்து ஏதோதோ செய்தார். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதியவரிடம் கேட்டபோது, அப்படி நான் ஒன்றும் செய்யவில்லை என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெற்றோர் அளித்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் ஷோபா ராணி வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒருவர் மறைந்திருந்து எடுத்த செல்போன் வீடியோ ஆதாரம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முதியவர் பரசுராமனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். நேற்று காலை முதியவர் பரசுராமனை பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024