Thursday, July 12, 2018

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய மின்வாரியம் உத்தரவு

By DIN | Published on : 12th July 2018 03:24 AM |

மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், ஃபோர்மேன் கிரேடு 1 மற்றும் சிறப்பு ஃபோர்மேன்களை பணியிட மாற்றம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:
தமிழ்நாடு மின்சார வாரியம் பணி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளுக்காக 42 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு கண்காணிப்பு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு மின் இணைப்பு வழங்குவது, மின் பழுதை சரிசெய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் களப்பணி மற்றும் நிர்வாகப் பணி என இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பணியில் சேர்ந்த ஊழியர்கள் அவரவர் விரும்பும் அல்லது தங்கள் சொந்த ஊர் பகுதிகளுக்கு பணியிட மாற்றம் பெற்று தொடர்ந்து அந்த இடங்களிலேயே பணி புரிந்து வருகின்றனர்.

மின்வாரியத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் இருப்பது குறித்து பல்வேறு நிலைகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்வாரியப் பொறியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மின்வாரியத்தில் களப்பிரிவில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஃபோர்மேன் கிரேடு- 1 மற்றும் சிறப்பு ஃபோர்மேன்கள், வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர்களைப் பணியிட மாற்றம் செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைத் தொடரும் என வாரியம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024