Tuesday, July 10, 2018

6 கல்வி மையங்களுக்கு அரசின் சிறப்பு அந்தஸ்து

Added : ஜூலை 10, 2018 01:32

புதுடில்லி: அரசால் நடத்தப்படும் மூன்று கல்வி மையங்கள், தனியார் நடத்தும் மூன்று கல்வி மையங்கள் ஆகியவற்றுக்கு, 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' என்ற அந்தஸ்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், நேற்று வழங்கியது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், 'டுவிட்டர்' சமூக தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு விபரம்:நாடு முழுவதும், 800 பல்கலைக் கழகங்கள் உள்ளன. ஆனால், சர்வதேச அளவில் தரம் வாய்ந்த, 100 அல்லது 200 கல்வி மையங்கள் அடங்கிய பட்டியல்களில், நம் நாட்டின் கல்வி மையங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை.இந்நிலையில், ஐ.ஐ.டி - டில்லி, ஐ.ஐ.டி - மும்பை, ஐ.ஐ.எஸ்.சி - பெங்களூரு ஆகிய மூன்று பொதுத்துறை கல்வி மையங்களுக்கு, 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.மணிப்பால் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய மூன்று தனியார் கல்வி மையங்களுக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், கல்வி மையங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் கிடைப்பதுடன், எந்தவொரு மாணவருக்கும், கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படாது என்பதும் உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024