Monday, July 23, 2018

ஸ்ரீவில்லிபுத்தூர்- -மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக மாறுகிறது

Added : ஜூலை 23, 2018 00:01

ஸ்ரீவில்லிபுத்துார், -மேகமலை உள்ளடக்கிய வனப்பகுதிகளை, புலிகள் சரணாலயமாக அறிவிக்க, 'தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்' முடிவு செய்துள்ளது. இந்தியாவில் புலிகள் குறைவதை தடுக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், 2006 ல், 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2014ல், 229 ஆக உயர்ந்தது. புலிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, ஸ்ரீவில்லிபுத்துார் -- மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க, மாநில வனத்துறை, 2013ல் பரிந்துரை செய்தது.அதை ஏற்ற தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 2014 ல், முதற்கட்ட அனுமதியை தந்தது.ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை வனப்பகுதியில், புலிகள் சரணாலயம் அமைக்க, தமிழக அரசு, 2016 ல், ஏழு உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்தது.அந்தக்குழுவும், புலிகள் சரணாலயம் அமைக்க உகந்த இடம் என, பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரை அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப் படவில்லை.
வனத்துறையினர் கூறியதாவது:மாநிலக்குழுவின் பரிந்துரையை ஏற்று, விரைவில்புலிகள் சரணாலய அறிவிப்பு வர உள்ளது.இந்த சரணாலயம் அமைக்கப்பட்டால், வருஷநாடு பகுதிகள், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில், வனத்துறையில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே உள்ளவர்களுக்கு, வேலைப்பளு குறையும். நீரோடைகள் அதிகரித்து, முல்லை பெரியாறு போல, வைகை ஆறும் பழைய நிலைக்கு திரும்பும். புலிகள் வாழ்விடம் பலப்படுத்தப் படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024