Monday, July 23, 2018

யு.ஜி.சி., கலைப்பு முடிவு : 7,600 பேர் கருத்து பதிவு

Added : ஜூலை 22, 2018 23:45

பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யை கலைக்கும் முடிவுக்கு, 7,600 பேர் மட்டுமே, கருத்துகளை பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள, யு.ஜி.சி., அமைப்பானது, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளை கண்காணிப்பதுடன், ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி அளிப்பது உட்பட, பல பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், யு.ஜி.சி.,யின் நிர்வாகத்தில் பல்வேறு குறைகள் உள்ளதாக, குற்றம் சாட்டிய மத்திய அரசு, அந்த அமைப்பை கலைத்து விட்டு, இன்னும் அதிகாரம் பொருந்திய, உயர்கல்வி கமிஷன் அமைக்க முடிவு செய்தது. அதனால், உயர்கல்வி கமிஷன் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஜூனில் வெளியிட்டது. இந்த முடிவுக்கு, தமிழகம் உட்பட, பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.'உயர்கல்வி கமிஷன் அமைத்தால், மத்திய அரசின் மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்; மேலும், நிதியை தன்னிச்சையாக செலவு செய்ய முடியாது' என, மாநில அரசுகள் கருதுகின்றன.மத்திய அரசின் முடிவு குறித்து, பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்கள் என, பல தரப்பிலும் கருத்து கேட்கப்பட்டது.இதற்கான அவகாசம், ஜூலை, 20ல் முடிந்தது. இதுவரை, 7,600 பேர் மட்டுமே, தங்கள் கருத்துகளை கூறியுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஒவ்வொரு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், உயர்கல்வி கமிஷன் குறித்த விவாதங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்ட நிலையில், வெறும், 7,600 பேர் மட்டுமே, எழுத்துப் பூர்வமாக கருத்துகளை பதிவு செய்திருப்பது, வியப்பு அளிப்பதாக உள்ளது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024