Sunday, July 15, 2018

உயர் கல்வி வளர்ச்சிக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் அவசியம்: தமிழக அரசு
By DIN | Published on : 14th July 2018 02:49 AM |

உயர் கல்வி வளர்ச்சிக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் தேவை இன்றியமையாதது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கிராமப்புற மாணவ-மாணவிகள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடிச் செல்ல சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உயர் கல்வி கற்பதற்குப் பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

இதற்கு ஏதுவாக கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு - பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக 264 புதிய பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்தி, அரசு கல்லூரிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் 46.9 சதவீதத்தை அடைந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்கள்: தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்காக, அரசு பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி தனியார் பல்கலைக்கழகங்களின் தேவையும் இன்றியமையாதது. இந்தப் பல்கலைக்கழகங்களில் ஏழை-எளிய மாணவ-மாணவிகள் படிப்பதற்காக 35 சதவீத இடஒதுக்கீடு பெறலாம்.
தனியார் துறையில் சாய் கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பொறுப்புக் கட்டளையின் மூலமாக பல்கலைக்கழகத்தை உருவாக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக, அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அறங்காவலர் கே.வி.ரமணி, முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலாளர் சுனில் பாலிவால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024