Sunday, July 15, 2018

சுவை தேடி: கம கமக்கும் வடகறி

Published : 14 Jul 2018 09:50 IST

மானா பாஸ்கரன்





அண்ணா சமாதி, எல்.ஐ.சி பில்டிங், லைட் ஹவுஸ், சென்ட்ரல் ஸ்டேஷன்… இந்த வரிசையில் சென்னைக்குப் பேர் வாங்கித் தரும் இன்னொரு பெருமை சைதாப்பேட்டை வடகறி.

பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல வடகறி மெயின் அயிட்டம் இல்லை. இதுவொரு தொடுகறி (சைடு டிஷ்). பக்க வாத்தியம், பக்கா வாத்தியமான கதைதான் வடகறியுடையது!

சென்னையின் அடையாளமான நடுத்தர, சிறிய உணவுக் கடைகளின் காலை நேரத்தை வடகறி மணக்க வைக்கிறது. பல இடங்களில் கிடைத்தாலும் இதற்குப் பாடல் பெற்ற தலம் என்னவோ சைதாப்பேட்டைதான்!

காலை நேரத்தில் சைதாப்பேட்டை வி.எஸ். முதலி தெரு வழியாகப் போக முடியாது என்கிற அளவுக்கு வாகனங்களும் மனிதர்களும் மாரி ஓட்டலின் முன்பாக நெருக்கியடித்து நிற்கிறார்கள். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வடகறி விற்பனையால் இவர்களுடைய கொடி உச்சத்தில் பறக்கிறது.

வடகறியின் கூட்டணி

மாரிமுத்து என்பவரால் சாதாரண ஓட்டு வீட்டில் இந்த ஓட்டல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அவருடைய மகன்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரனின் கைங்கர்யத்தால் உயர்ந்த கட்டிடமாக நிமிர்ந்து நிற்கிறது ‘வடகறி புகழ்’ மாரி ஓட்டல்.

குமரனின் வார்த்தைகளிலும் வடகறி மணக்கிறது. “எங்கப்பா காலத்துல முதன்முதலா வடகறி செஞ்சு விற்க ஆரம்பிச்சப்போ, முதல்நாள் மீந்துபோன வடை, பஜ்ஜி, போண்டா எல்லாத்தையும் ஊற வெச்சு தயாரிக்கிறாங்கன்னு அரசல்புரசலா பேசிக்கிட்டாங்க. முதல் நாள் போட்ட போண்டாவோ, வடையோ ஊசிப் போயிடும், பூசனம் பூத்துடும். அதை வெச்சி வடகறி தயாரிச்சா, நிச்சயம் ஃபுட் பாய்ஸன் ஆகிடும். எழுபது வருஷமா சக்சஸ்ஃபுல்லா வடகறி விற்கிறதுக்குக் காரணமே, நாங்க தினமும் புதுசா வடகறி தயாரிக்கிறதுதான். இதுக்குன்னு மாஸ்டர்கள் வெச்சிருக்கோம். எங்களால ஒரு லெவலுக்கு மேலே தயாரிக்க முடியலை. அவ்வளவு தேவை இருக்கு. எங்க வடகறியோட ருசிக்கு அடிமையானவங்க பலரும் இருக்காங்க. நடிகர் - இயக்குநர் பாண்டியராஜன் சாரெல்லாம்கூட எங்களோட கஸ்டமர்தான்” என்கிறார் பெருமிதமாக.

தனித்து நின்று ஜெயிக்கும் அளவுக்கு வடகறி பெயர் பெற்றிருந்தாலும், தோசை, இட்லி, பரோட்டாவுடன் கூட்டணி சேரும்போதுதான் பெரும்பான்மை வாக்குகளை நிச்சயம் அள்ளும்.

எப்படிச் செய்வது?

பட்டாணி மாவுடன் கொஞ்சம் கடலை மாவைக் கலந்து வைத்துக்கொள்கிறார்கள். அதைச் சுத்தமான எண்ணெயில் பக்கோடா மாதிரி பொரித்து எடுத்து, ஆறவைக்கிறார்கள். நன்றாக ஆறிய பக்கோடா கொஞ்ச நேரம் தண்ணீரில் ஊற வைக்கப்படுகிறது. இதற்கிடையில் மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, லவங்கம் ஆகியவற்றை அரைத்துத் தாளித்துக்கொள்கிறார்கள். ஊறிய பக்கோடாவையும் அரைத்த தாளிகையையும் ஒன்றாகக் கலந்து கொதிக்கவிட்டால் வடகறி கமகமக்க ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு முன்பாகவே கூடிவிடுகிறது, வடகறி ருசிகர் கூட்டம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024