Sunday, July 15, 2018

குறிப்புகள் பலவிதம்: பூப்போன்ற இட்லிக்கு வெந்நீர்

Published : 15 Jul 2018 10:05 IST




# சமையல் பாத்திரம் தீய்ந்துவிட்டால் பயன்படுத்திய காபித் தூள், சீயக்காய்த் தூள் இரண்டையும் அந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கவிட்டால் கறை நீங்கிப் பாத்திரம் பளிச்சிடும்.

# முல்தானிமிட்டியில் ரோஸ் வாட்டர் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி கால் மணி நேரம் ஊறவைத்துப் பிறகு முகம் கழுவினால் முகம் பொலிவுபெறும்.

# புதினா, மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றில் துவையல் அரைக்கும்போது அவற்றுடன் மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.

# காபிக்கு டிகாக்ஷன் போடும்போது ஃபில்டரில் முதலில் சர்க்கரையைப் போட்டு பிறகு அதன் மேல் காபிப் பொடியைப் போட்டு வெந்நீர் ஊற்றுங்கள். டிகாக்ஷன் உடனே இறங்குவதுடன் ஸ்ட்ராங்காகவும் இருக்கும்.

# இட்லி அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் இட்லி பூப்போல் இருக்கும்.

# இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்து குறைவாக இருந்தால் சில அப்பளங்களைத் தண்ணீரில் ஊறவைத்து அரிசியுடன் சேர்த்து அரைக்கலாம்.

# ரவையை நெய்யில் சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வையுங்கள். பிறகு சர்க்கரைப் பாகு செய்து அதில் இந்த ரவையைக் கொட்டி கேசரி செய்தால் நெய் குறைவாகச் செலவாகும்; சுவையும் கூடும்.

# சப்பாத்திக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதில் இளநீர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

# உருளைக் கிழங்கைத் தோல் சீவி, உப்புத் தண்ணீரில் ஊறவைத்து உலர்த்தி எண்ணெய்யில் வறுத்தெடுத்தால் வறுவல் மொறுமொறுவென இருக்கும்.

# உளுந்து வடைக்கு அரைக்கும்போது மாவு நீர்த்துவிட்டால் சிறிது அவலை மாவாக அரைத்துக் கலந்துவிட்டால் போதும்.

# மழைக் காலத்தில் கதவு, ஜன்னல்களைத் திறக்க கஷ்டமாக இருந்தால் சிறிது கோலமாவுடன் உப்புத் தூளைக் கலந்து கதவு, ஜன்னல் விளிம்பில் தூவிவிட்டால் சிரமமின்றித் திறக்கலாம்.

# அரிசியைக் கழுவிய நீரில் துருப்பிடித்த கத்தி, அரிவாள், இடியாப்ப அச்சு ஆகியவற்றைப் போட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்த பிறகு எடுத்துத் துடைத்தால் துரு நீங்கிவிடும்.

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.




தினம் ஒரு கீரை

# புதினாவையும் கறிவேப்பிலையையும் துவையலாக அரைத்துச் சாப்பிடுவது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நல்லது.

# உடலில் கொழுப்பு சேராமல் தண்டுக்கீரை தடுக்கும். இந்தக் கீரையைப் பொரியலாகவோ சாம்பார் செய்தோ சாப்பிடலாம். பச்சடியிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

# நீண்ட நேரம் படிப்பவர்கள், எழுதுபவர்கள், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் கண்கள் விரைவில் களைத்துப் போய்விடும். இவர்கள் பீட்ரூட் கீரை, முள்ளங்கிக் கீரை, கேரட் கீரை ஆகியவற்றைச் சாப்பிட்டுவந்தால் கண்களுக்கு நல்லது.

# வயிற்றுப் புண், வாய்ப் புண், சொறி, சிரங்கு ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் மணத்தக்காளி கீரையைச் சாப்பிட வேண்டும். இந்தக் கீரையைச் சாப்பிட்டுவர தூக்கமின்மையும் குணமாகும்.

# நினைவாற்றலைப் பெருக்கும் வல்லாரைக் கீரையைக் குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிடுவது நல்லது.

# மன அழுத்தம், மூளைச் சூடு குறைய கொத்தமல்லியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

(கே.எஸ். சுப்ரமணி எழுதிய ‘இளமை காக்கும் உணவு முறைகள்’ நூலிலிருந்து)

- சரஸ்வதி பஞ்சு, திருச்சி.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024