பெங்களூரு வான்பரப்பில் இரு விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 328 பயணிகளின் உயிரை காப்பாற்றிய எச்சரிக்கை அலாரம்
Published : 13 Jul 2018 07:51 IST
இரா.வினோத் பெங்களூரு
பெங்களூரு வான்பரப்பில் 328 பயணிகளுடன் பறந்த இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து 162 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஹைதராபாத் நோக்கி சென்றது. இதே போல பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு 166 பயணிகளுடன் மற்றொரு இண்டிகோ விமானமும் கிளம்பியது.
இரு விமானங்களும் பெங்களூரு வான்பரப்பில் நேருக்கு நேராக வந்துள்ளன. அப்போது சுமார் 200 அடி இடைவெளி உயரத்தில் அவை பறந்துள்ளன. இரண்டுக்கும் இடையிலான தொலைவு 8 கி.மீ. ஆக இருந்துள்ளது. அந்த நேரத்தில் இரு விமானங்களிலும் பொருத்தப்பட்டிருந்த விமான மோதல் தடுப்பு சாதனம் (டிசிஏஎஸ்) அபாய அலாரத்தை எழுப்பியது. விமானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், கோவை- ஹைதராபாத் பயணிகள் விமானத்தை 36,000 அடி உயரத்திலும் பெங்களூரு கொச்சி விமானத்தை 28,000 அடி உயரத்திலும் பறக்க உத்தரவிட்டனர். இரு விமானங்களும் நடுவானில் மேலும் கீழுமாக இடம் மாறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பொதுவாக இந்திய பயணிகள் விமானம் மணிக்கு 750 முதல் 850 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியவை. சிறிது தாமதித்து இருந்தால் நடுவானில் விமானங்கள் மோதி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்களில் விமானங்கள் பத்திரமாக தரையிறங்கின. ஆனால் திடீரென ஒரு விமானம் மேலேயும் மற்றொரு விமானம் கீழேயும் இறங்கியதால் சில பயணிகளுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.
விமான நிறுவனம் விளக்கம்
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
இரு விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது உண்மைதான். சற்று அலட்சியமாக இருந்திருந்தாலும் இரு விமானங்களும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எங்கள் தவறு ஏதும் இல்லை. விமான போக்குவரத்து விபத்துத் தவிர்ப்பு அமைப்பின் வழிகாட்டல்படியே கோவை - ஹைதராபாத் மற்றும் பெங்களூரு - கொச்சி ஆகிய தடங்களில் எங்கள் இரு விமானங்களும் சரியான நேரங்களில் இயக்கப்பட்டன.
வானில் இரு விமானங்களும் மோதும் வகையில் ஒரே உயரத்தில் நேருக்கு நேர் பறந்ததற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. டிசிஏஎஸ் எச்சரிக்கை அலாரத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment