Thursday, July 2, 2015

ரூ. 200 கோடியில் செவிலியர் மேம்பாட்டு ஆய்வு மையம்

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் ரூ. 200 கோடி செலவில் மத்திய செவிலியர் மேம்பாட்டு மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய குடும்பநலத் துறைக்கான செவிலியர் ஆலோசகர் டாக்டர் ஆர்.ஜோசபின் லிட்டில் ப்ளவர் கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி செவிலியர் பயிற்சிக் கல்லூரி சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
இந்தியாவில் தற்போது 8 ஆயிரத்து 200 செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவை ஆண்டுக்கு 2.95 லட்சம் செவிலியர்களை உருவாக்கி வருகின்றன. இந்தியாவெங்கும் அனைத்து செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மருத்துவத் துறைக்குப் பெருமை சேர்க்கும் இந்திய செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இந்திய செவிலியர்களின் தேவை பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள 24 லட்சம் செவிலியர்களில் சிறப்புத் தகுதியும், திறனும் கொண்ட செவிலியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
இதனால், சர்வதேசத் தரம் கொண்ட பன்திறன் மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கேற்ப செவிலியர்களின் செயல் திறன், ஆய்வுத் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் இதர மாநிலங்களில் செயல்பட்டு வரும் செவிலியர் கவுன்சிலை ஒப்பிடும்போது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் முதலிடத்தைப் பெற்று, இதர மாநிலங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024