Friday, January 5, 2018

தேடப்படும் குற்றவாளி மல்லையா; அறிவித்தது டில்லி கோர்ட்

Added : ஜன 05, 2018 02:21 |

    புதுடில்லி : 'பெரா' வழக்கில் ஆஜராகாத, பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக, டில்லி கோர்ட் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேரந்த, பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கியுள்ள அவன் மீது, ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 1996, 97 மற்றும் 98ம் ஆண்டுகளில், பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில், 'பார்முலா ஒன்' கார் பந்தயம் நடந்தது. இந்த போட்டிகளில், மல்லையாவுக்கு சொந்தமான, கிங்பிஷர் நிறுவன தயாரிப்புகளை விளம்பரப்படுத்த, பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.

அமெரிக்க டாலரில் செலவழிக்கப்பட்ட இந்த தொகை, இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் செலவழிக்கப்பட்டதாக, பெரா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை, டில்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், ஆஜராகும்படி, மல்லையாவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

பல முறை, 'சம்மன்' அனுப்பியும், மல்லையா ஆஜராகாததால், அவனுக்கு எதிராக, கடந்த ஆண்டு, ஜாமினில் வெளிவர முடியாத, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. எனினும், மல்லையா, மீண்டும் ஆஜராகாததால், அவனை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, டில்லி கோர்ட், நேற்று உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024