Friday, January 26, 2018

பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய நிலை




தமிழ்நாட்டில் பல குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதற்கு பொறியியல் கல்லூரிகளும் ஒரு காரணமாகும்.

ஜனவரி 26 2018, 03:00 AM

தமிழ்நாட்டில் பல குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதற்கு பொறியியல் கல்லூரிகளும் ஒரு காரணமாகும். கடந்த பல ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்ப புரட்சியாலும், உற்பத்தித்துறையின் முன்னேற்றத்தாலும், பொறியியல் பட்டதாரிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. படித்து முடித்தவுடன் கைமேல் வேலை, பைநிறைய சம்பளம் என்ற வகையில், உடனடியாக நல்ல வேலை கிடைத்தது. இதனால் பிளஸ்–2 படித்து முடித்த மாணவர்களும், தங்கள் முதல் தேர்வாக பொறியியல் பட்டப்படிப்பையே விரும்பினார்கள். அவர்களின் பெற்றோர்களும் எவ்வளவு கஷ்டப்பட்டாவது பிள்ளைகளை பொறியியல் படிக்கவைத்துவிட்டால், வேலைகிடைத்தவுடன் அவர்கள் குடும்பத்தை காப்பாற்றிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் ஏழை குடும்பத்தினர்கூட தங்கள் வீட்டுபிள்ளைகளை பொறியியல் படிக்கவைத்தார்கள்.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏராளமான பொறியியல் கல்லூரிகளை தனியார் தொடங்கினார்கள். பெரும் பொருட்செலவில் இந்த கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது 526 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்ததால் நிறையபேர் இந்த படிப்பை படிக்கத்தயங்கினார்கள். வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் ஒரு செமஸ்டரில் கூட தோல்வி அடையாத மாணவர்களையே வேலைக்கு எடுத்தார்கள். ஆனால், நமது கல்வித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளால், பிளஸ்–2 படித்த மாணவர்களால் அதற்குமேல் பொறியியல் கல்லூரியில் வந்து சேரும்போது, செமஸ்டரில் தோல்வி அடையவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள், அரசு ஒதுக்கீட்டில் உள்ள 1,75,500 இடங்களையும், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 15,727 இடங்களையும் சரண்டர் செய்துவிட்டார்கள். 1,35,552 இடங்களுக்கு மட்டும் கவுன்சிலிங் நடந்தது. ஆனால், இதில் 86,355 இடங்களுக்கு மட்டும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில், பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு ராஜாங்க மந்திரி தாக்கல் செய்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள 526 பொறியியல் கல்லூரிகளில், 177 கல்லூரிகளில் 30 சதவீத இடங்களுக்கும் குறைவான மாணவர்கள்தான் சேர்ந்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே குறைந்த அளவு மாணவர்கள் சேர்ந்த கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதல் இடம் வகிக்கிறது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதியளவு மாணவர்கள் சேராததாலும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசு இன்னும் தராததாலும் கடுமையான நிதிபற்றாக்குறையில் தள்ளாடுகிறது. பொறியியல் கல்லூரிகளை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றலாம் என்றால் அதற்கும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் அனுமதி அளிப்பதில்லை. மூடுவதற்கு வேண்டுமானால் அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். இந்த சூழ்நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், படித்துமுடித்தவுடன் வேலை கிடைப்பதற்கு ஏற்றவகையில் அவர்கள் பாடத்திட்டம், பயிற்சிகள் மாற்றப்படவேண்டும். படிக்கும்போதே அவர்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், திறன்மேம்பாட்டு மையங்கள் அமைப்பதிலும் தொழில்கல்வி மையங்கள் அமைப்பதிலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இன்னும் வேகமாக செயல்படவேண்டும். நாட்டில் உற்பத்திப்பிரிவு குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறை இன்னும் வேகமாக வளர்ச்சி பெற்றால்தான் பொறியியல் கல்வியை காப்பாற்ற முடியும்.

No comments:

Post a Comment

Groom not the man she met on Instagram, bride calls off shaadi

Groom not the man she met on Instagram, bride calls off shaadi  MATCH MISMATCH 15.05.2026 Lucknow : A friendship that began on Instagram end...