Saturday, January 6, 2018

புதுமை!'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரயில்வே..
பயணியருக்கு முழு தொகை திரும்ப கிடைக்க வாய்ப்பு

புதுடில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவில், 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யில், 'மொபைல் ஆப்' மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியரில், அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தில், 100 சதவீதம் திரும்ப தரும் திட்டத்தை, ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.





கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, 2016, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டன.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், டிஜிட்டல் பண பரிவர்த்தனை கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'பாரத் இன்டர்பேஸ் பார் மணி' எனப்படும், 'பீம்' மற்றும், 'யுனிபைடு பேமென்ட் இன்டர்பேஸ்' எனப்படும், 'யு.பி.ஐ.,' மொபைல் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

தனியார், 'பேமென்ட் வாலட்'டுகளை விட, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்த ஆப்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதால், மக்கள் இந்த ஆப்களை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவன இணையதளம் மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் போது, இந்த ஆப்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்வோரை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இது குறித்து, ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவில்,

டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை மேலும் அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் சில திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பீம் மற்றும் யு.பி.ஐ., ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு, அதிர்ஷ்ட பரிசு வழங்கும் திட்டம், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறையில், பண பரிவர்த்தனை செய்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணியரில், ஒவ்வொரு மாதமும், குலுக்கல் முறையில், ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் முன்பதிவு செய்த தொகை முழுவதும், திருப்பித் தரப்படும். அதாவது, அதிர்ஷ்டசாலிகள் ஐந்து பேருக்கு, 100 சதவீத டிக்கெட் தொகை பரிசாக கிடைக்கும்.

தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, அவர்களின் மொபைல் எண் மற்றும் இ - மெயில் முகவரியில், தகவல் தெரிவிக்கப்படும். வரும் மார்ச் வரை சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பொதுமக்கள் வரவேற்பை பொறுத்து, மேலும் நீட்டிக்கப்படும். இது போன்ற மேலும் சில சிறப்பு திட்டங்களை செயல்படுத்தவும், ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

முக்கிய ரயில்களின் நேர மாற்றம், கால தாமதமாக வரும் ரயில்கள் பற்றிய அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து, பயணியரின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது, அனைத்து ரயில் சேவைகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் வரவேற்பு:

மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்படும் பீம் மற்றும் யு.பி.ஐ., மொபைல் ஆப்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்துள்ளது. 2017 நவம்பரில், யு.பி.ஐ., ஆப்பை பயன்படுத்தி, 10.5 கோடி பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த எண்ணிக்கை, 14 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆப்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

  கூடுதல் வருவாய் :

ரயில் டிக்கெட் புக்கிங்கில் அமல்படுத்தப்பட்ட, 'பிளக்சி பேர்' திட்டத்தால், ரயில்வேக்கு, 671 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து, ரயில்வே இணையமைச்சர் ராஜன் கொஹைன், லோக்சபாவில் கூறியதாவது: ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட ரயில்களில், 2016 செப்டம்பரில், பிளக்சி பேர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில்களில், ஒவ்வொரு, 10 சதவீத படுக்கை வசதி இருக்கைகள் காலியானதும், 10 முதல், 50 சதவீதம் வரை, அடிப்படை கட்டணம் உயரும். அந்த அடிப்படையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 2017 நவம்பரில், ரயில்வேக்கு, 671 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரயில் நிலையங்கள் மேம்பாடு:

'பயணியர் எண்ணிக்கை, வருவாய் அடிப்படையில், நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், ராஜ்யசபாவில் கூறியதாவது: பயணியர் எண்ணிக்கை, வருவாய் மற்றும் மேலும் பல அம்சங்களின் அடிப்படையில், பல ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தேவைக்கேற்ப ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும். பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில், ரயில்வே அமைச்சகம் உறுதியாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 



ரூ.143 லட்சம் கோடி!

நாட்டின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நவ., 2016ல், 91 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட நிலையில், அக்., 2017ல், இந்த எண்ணிக்கை, 153 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 143 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

-அல்போன்ஸ், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024