Tuesday, January 23, 2018

கணவனே தோழன்: முதுமையில் ஊஞ்சலாடும் இளமை

Published : 21 Jan 2018 12:41 IST



நான் பணி நிறைவு பெற்ற ஆசிரியை. எனக்கு 80 வயது, என் கணவருக்கு 90. ஆனால், இந்த வயதிலும் என் இளமைக்கால நினைவுகள் என் கண் முன்னே கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. எனக்கென்னவோ இந்தக் காலத்தைவிட அந்தக் காலத்தில்தான் அதிக த்ரில்லாக இருந்ததுபோல் தெரிகிறது. அப்போ எல்லாம் கணவரிடம் பேசும் நேரம் மிகவும் குறைவு. கணவர் வேலைக்குச் செல்வதால் வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அதனாலேயே கணவன், மனைவி இருவருக்குமான பேச்சும் குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால், இன்றைக்கும் அதே நிலைதான் நீடிக்கிறது. கணவன், மனைவி ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் செல்போனில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைய இளம் தம்பதிகள் வெளியூர்களுக்குச் சென்று தேனிலவு கொண்டாடுவதுபோல் எங்கள் தலைமுறைக்கு எதுவும் வாய்க்கவில்லை. கணவருடனான சிறு சிறு மகிழ்ச்சியான தருணங்கள், துக்கம், மகிழ்ச்சி, சண்டை என எல்லாம் சமையலறையில்தான் நடக்கும்.

குழந்தைகளின் முதல் வகுப்பு பாடப்புத்தகத்தில் குடும்பம் என்பதை விளக்க ஒரு படம் போட்டிருப்பார்கள். அதில் அப்பா நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேப்பர் படித்துக்கொண்டிருப்பார். அம்மா கையில் காபி வைத்துக்கொண்டிருப்பார். அதுபோல்தான் அந்தக் கால வாழ்க்கை முறை இருந்தது. குடும்ப அமைப்பு முறை எப்படியிருந்தாலும் கணவன், மனைவிக்கு இடையே ஈகோ இல்லை. நானும் என் கணவரும் அப்படித்தான் இருந்தோம்.

வீட்டில் இடி இடிக்கும்; மழை பெய்யும்; மின்னல் மின்னும்; தென்றல் வீசும். ஆனால், என் கணவரின் அன்பு மட்டும் மாறாமல் இருந்தது. தற்போது முதுமையிலும் அவர் என் மீது வைத்துள்ள அன்பைப் பார்க்கும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது. மும்பையில் இருக்கும் எங்கள் மகன் வீட்டில் இருந்து விமானம் மூலமாகச் சென்னைக்குத் திரும்பினோம்.

அப்போது பேரக் குழந்தைகள், “தாத்தாவைப் பார்த்துக்கோ பாட்டி” எனச் சொன்னார்கள். அந்த நொடி அவர் கையைப் பற்றிக்கொண்டு விமானத்தில் வந்தது முதுமையில் தேனிலவு போனதுபோல் இருந்தது. தற்போது முதுமை காரணமாக இருவரும் ஒருவருடைய கையை ஒருவர் பிடித்துக்கொண்டு விழாமல் நடக்கும்போது எங்கள் இருவருக்குள் இளமை ஊஞ்சலாடுகிறது!

- கோமதி பிச்சுமணி, திருநெல்வேலி.

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...