Monday, July 16, 2018

நீட்' குழப்பத்தில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் தவிப்பு

Added : ஜூலை 16, 2018 06:09




'நீட்' தேர்வு பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் இறுதி முடிவு எடுக்காததால், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

'நீட் தேர்வில், தமிழ் வழி வினாத்தாளில் ஏற்பட்ட மொழி மாற்ற குளறுபடியால், தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும், 49 கேள்விகளுக்கு தலா, நான்கு மதிப்பெண் வீதம், 196 மதிப்பெண் தர வேண்டும்.

'புதிய தரவரிசை பட்டியலை, இரண்டு வாரங்களில், சி.பி.எஸ்.இ., வெளியிட வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், அது வரை, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., உள்ளிட்டவை, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளன. இதனால், மருத்துவம், இன்ஜி., படிப்புகளுக்கு விண்ணப்பித்த, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மேற்படிப்புக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

சிக்கல்கள் என்ன?

* நீதிமன்ற உத்தரவுப்படி, 196 மதிப்பெண்கூடுதலாக வழங்கினால், தமிழ் வழியை தேர்வு செய்த, 24 ஆயிரம் பேரின் மதிப்பெண் மாறும்; அகில இந்திய அளவில் தேர்வெழுதிய,
11 லட்சம் பேரின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏற்படும். அதுபோல, தமிழகத்தில் தேர்வெழுதிய, 1.07 லட்சம் பேரின் மதிப்பெண் மற்றும் தரவரிசையும் மாறும்

* தமிழக மாணவர்களில் பலர் ஏற்கனவே, 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளதால், 196 மதிப்பெண்ணை கூடுதலாக பெறும் போது, இன்னும் அதிகமான மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், 'டாப்பர்' பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது

* புதிய தரவரிசைப்படி, அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கை மறுபடியும் நடத்தும் நிலை ஏற்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள, 15 சதவீத இடங்களில், பெரும்பாலான
இடங்களை, தமிழக மாணவர்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநிலங்களும், புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டு, கவுன்சிலிங் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்

* தமிழகத்திலும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் முடிந்த நிலையில், அவற்றை ரத்து செய்து, புதிய தரவரிசையின் படி மீண்டும் நடத்த வேண்டும். அப்போது, ஏற்கனவே ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, 'சீட்' கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். தமிழ் வழி மாணவர்களுக்கு, அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது, இது போன்ற பல்வேறு குளறுபடிகள் காத்திருக்கின்றன. ஆனால், தேசிய அளவில் புதிய தரவரிசை வெளியிடுவதோ, கவுன்சிலிங்கை ரத்து செய்து, மீண்டும் நடத்துவதோ நடைமுறையில் முடியாத காரியம். இதனால், மாணவர்களும், பெற்றோரும், கல்வி நிறுவனத்தினரும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, மருத்துவ கவுன்சிலிங் தாமதம் ஆவதால், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கும் தாமதமாகி உள்ளது. கவுன்சிலிங்கை தாமதமாக நடத்த, தமிழக அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

இதனால், இன்ஜி., படிப்பில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில் சேரும் மாணவர்களின் முடிவுகளும் மாற வாய்ப்புள்ளது.மற்ற மாநிலங்களிலும், கவுன்சிலிங்கை மீண்டும் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அங்கும் இன்ஜினியரிங் உள்ளிட்ட மற்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படும்.

மொத்தத்தில், நீட் தேர்வில், மத்திய, மாநில அரசுகள் சரியான முடிவு எடுக்காமல் தாமதம் செய்வதால், தமிழகத்தில் மட்டும், மருத்துவம், இன்ஜி., படிப்பில் சேரும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஜினியரிங்கில் வீணாகும் இடங்கள்

* கடந்த, 2017ல், மருத்துவ கவுன்சிலிங் தாமதமானதால், அதற்கு முன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில், அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளில் இடம் ஒதுக்கீடு பெற்ற, 445 பேர், பின் நடந்த மருத்துவ கவுன்சிலிங்கில் இடம் கிடைத்ததால், இன்ஜி., படிப்பில் சேரவில்லை

* இதனால், 445 இடங்களும் காலியானதுடன், படிப்புக்கான நான்கு ஆண்டுகளும், காலியாகவே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளில் இடம் கிடைக்காதா என, மாணவர்கள் காத்திருக்கும் சூழலில், அந்த இடங்கள் யாருக்கும் பயனின்றி வீணாகியுள்ளன

* இந்த ஆண்டும், மருத்துவ கவுன்சிலிங்கில் ஏற்பட்டுள்ள தாமதம், மீண்டும், அண்ணா பல்கலையின், இன்ஜி., கல்லுாரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இன்ஜி., கவுன்சிலிங்கையும் உரிய நேரத்தில் நடத்தி, திட்டமிட்டபடி, ஆக., 1ல் வகுப்புகளை துவக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024