Saturday, July 14, 2018

'பிசியோதெரபிஸ்ட்' கொலையில் மறைக்கப்படும் இடைத்தரகர்கள்

Added : ஜூலை 14, 2018 03:38

திருச்சி:திருச்சியில், 'பிசியோதெரபிஸ்ட்' கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கூலிப்படைக்கும், கொலைக்காரர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர்களை போலீசார் மறைத்து, தப்ப வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்த விஜயகுமார், 36, என்பவர், கள்ளக்காதல் விவகாரத்தில், 8ம் தேதி, திருச்சி காவிரி ஆற்றில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.விசாரித்த ஸ்ரீரங்கம் போலீசார், திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஈஸ்வரி, 21, மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த, 25 - 33 வயதுடைய கூலிப்படையினர், மூன்று பேரை கைது செய்தனர்.
ஈஸ்வரி, சென்னையில், சி.ஏ., படித்தபடியே, வேலை பார்த்து வந்தார். இவருக்கும், விஜயகுமாருக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்துள்ளது.அவர்கள் உல்லாசமாக இருந்த போது, அதை, 'வீடியோ' எடுத்து, ஈஸ்வரியை விஜயகுமார் மிரட்டி வந்ததாகவும், அதிலிருந்து தப்பிக்கவே, கூலிப்படையினரை தயார் செய்து, விஜயகுமாரை கொலை செய்ததாகவும், ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலத்தில், தானே நேரில் சென்று, சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கூலிப்படையினரை ஏற்பாடு செய்ததாக, போலீசார் கூறுகின்றனர். ஆனால், கூலிப்படையினரை ஏற்பாடு செய்ய, ஈஸ்வரிக்கு சிலர் உதவியுள்ளனர்.அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, ஈஸ்வரிக்கும், கூலிப்படையினருக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர்களை, மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொலை வழக்கில் சிக்கியுள்ள ஈஸ்வரி, 10ம் வகுப்பில், 498 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் இரண்டாமிடமும், பிளஸ் 2வில், 1,183 மதிப்பெண்ணும் பெற்று, படிப்பில் சிறந்து விளங்கிஉள்ளார். தற்போது, சென்னையில், சி.ஏ., படித்து வரும் ஈஸ்வரிக்கு தாய் இல்லை. தந்தையும், தங்கையும் உள்ளனர்.கைது செய்யப்பட்ட நால்வரும், நேற்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024