Saturday, July 14, 2018

யுஜிசி அமைப்பே தொடர வேண்டும்: முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு

By DIN | Published on : 14th July 2018 01:40 AM |




மத்திய அரசு அமைக்க உத்தேசித்துள்ள உயர் கல்வி ஆணைய சட்ட முன்வரைவு குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

இந்திய உயர் கல்வி ஆணையம் கொண்டு வருவது அவசியமற்றது. ஏற்கெனவே சிறப்பாகச் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைப்பே தொடர வேண்டும் என்பது தமிழகத்தின் கருத்தாகும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவே, இந்திய உயர் கல்வி ஆணைய சட்ட முன்வரைவு மீதான தமிழக அரசின் கருத்தாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு (எம்.ஹெச்.ஆர்.டி.) அனுப்பப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்தெரிவித்தார்.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட முன்வரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு (எம்.ஹெச்.ஆர்.டி.) அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட மத்திய அரசு, இதுதொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை வரவேற்றுள்ளது.

இதில் கருத்துகளைத் தெரிவிக்க ஜூலை 7 கடைசித் தேதி என முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கான கால அவகாசம் ஜூலை 20 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கும், சட்ட முன்வரைவில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கும் கல்வியாளர்களும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள கலை-அறிவியல் உயர் கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கானத் திட்டமே இது எனவும் கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

முதல்வர் தலைமையில் ஆய்வு: இந்தச் சட்ட முன்வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் க.சண்முகம், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அளித்த பேட்டி: யுஜிசி அமைப்பு கடந்த 1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. யுஜிசி-யை ரத்து செய்துவிட்டு, புதிதாக இந்திய உயர் கல்வி ஆணையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்குவது தேவையற்றது.

ஏற்க முடியாது: மேலும், கல்வி சார்ந்த பணிகளை மட்டும் இந்த ஆணையம் கவனிக்கும்; உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் எம்.ஹெச்.ஆர்.டி. அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, யுஜிசி அமைப்பே தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்தாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசின் கருத்தாக... இந்த முடிவு தமிழக அரசின் கருத்தாக உடனடியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு (எம்.ஹெச்.ஆர்.டி.) அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் மீது கருத்துத் தெரிவிக்க ஜூலை 20 வரை கால அவகாசம் இருக்கிறது என்றபோதும், உடனடியாக இந்தக் கருத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விடும் என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024