Wednesday, March 8, 2017

பிரபலமடையாத நல்ல திட்டம்

By க. பழனித்துரை  |   Published on : 07th March 2017 02:39 AM   
அண்மையில் ஒருநாள் அதிகாலை புறப்பட்டு நான் காரில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தபோது காலை உணவிற்காக ஒரு ஹோட்டல் வாசலில் இறங்கினேன். அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒருவர் இருந்தார். வெளியே கார் அருகில் அவரையே பார்த்தபடி ஒரு மூதாட்டி நின்றிருந்தார்.
காரில் இருந்தவர் சில மாத்திரைகளைக் கையில் எடுத்துக்கொண்டு பின் அவற்றை மொத்தமாக வாயில் போட்டு தண்ணீரை ஊற்றிக் குடித்துவிட்டு காரிலிருந்து உணவகத்திற்குப் புறப்பட்டார். அப்பொழுது தன் மணிபர்சிலிருந்து 50 ரூபாயை அந்த மூதாட்டியிடம் கொடுத்து ’நீ மாத்திரை வாங்கிக்கொள்' என்று கூறினார்.
அத்துடன் அவர் இன்னொரு செய்தியை அந்த மூதாட்டியிடம் கூறினார். ’பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகச் சேவைப்பிரிவு இங்கு எங்காவது இருக்கும் அங்கு சென்று மருந்துகளை வாங்கினால் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
நான் அந்த மூதாட்டி அருகில் சென்று ’உங்களுக்கு என்ன மாத்திரை வேண்டும்' என்று கேட்டேன். ’நான் ஒரு நீரிழிவு நோயாளி, எனக்கு அதற்கான மாத்திரை தேவை. அதனை வாங்குவதற்கு வழியில்லாமல்தான் இந்த இடத்தில் காரில் வருபவர்களிடம் எதாவது பணம் கிடைக்காதா என்று இங்கு வருகிறேன்' என்று கூறினார்.
அந்த மூதாட்டியின் நிலை என்னை ஏதோ செய்து கொண்டே இருந்தது. அடுத்த வாரத்திலேயே தில்லி செல்ல வேண்டியிருந்தது. அப்படி தில்லியில் இருந்தபோது என் நண்பர் ஒருவரைச் சந்திக்க தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவர் நான் தங்கி இருந்த விருந்தினர் இல்லம் வந்தார்.
அவருடன் இன்னொரு நண்பரை அழைத்துவந்தார். அவரை என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகத்திற்குப்பின் அவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழைகளுக்கான அற்புதமான மருந்தகத் திட்டம் இன்னும் அந்த ஏழைகளை எட்டிப்பார்க்கவே இல்லை. எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் எட்ட வேண்டிய இலக்கை நாங்கள் எட்டவில்லை என்று ஆதங்கப்பட்டு கூறினார்.
எனக்கு அப்போது நான் சந்தித்த மூதாட்டியின் முகம் என் கண்முன் வந்தது. அந்தக் கதையை அவரிடம் கூறினேன். உடனே அவர் ’இந்த மாதிரி ஏழைகளுக்குத்தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது' என்றார்.
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் செயல்படாமலே இருந்து, தற்போது புதிய வடிவம் பெற்றுள்ளதை விளக்கினார். இந்தத் திட்டத்தின் பெயர் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தக சேவை வளர்திட்டம்.
இதை மாநில அரசுகள் எல்லா மருத்துவமனைகளிலும் ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவலாம், அதேபோல் மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து ஏழைகளின் துயர் துடைக்கப் பணி செய்யலாம்.
இதனை ஒரு சமூகச் சேவையாகச் செய்யலாம். அதே நேரத்தில் இதில் ஒரு வணிகமும் இருக்கின்றது. இந்த மக்கள் மருந்தகத்தை ஆரம்பித்து நடத்துபவர்களுக்கு 20%-லிருந்து 30%-வரை லாபம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் இணைந்து இந்த மக்கள் மருந்தகத்தை துவக்க எண்ணுபவர்களுக்கு ரூ.2.50 லட்சம் வரை அரசு நிதி உதவி அளிக்கின்றது. இதன் மூலமாக சேவையும் செய்யலாம், லாபமும் ஈட்டலாம்.
இந்த மருந்தகத்தில் 800 மருந்துகள் வரை இன்று விற்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எல்லா மருந்தகங்களிலும் 1000 மருந்து வகைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவை ஒரு இடம், அதற்கான லைசென்ஸ் இவை இரண்டும்தாம். இருந்தால் உடனே மனுச் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்தச் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிர்வாகக் கட்டமைப்பை தனி நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, மக்கள் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் என்பது 2008-ஆம் ஆண்டே துவங்கப்பட்டது. எனினும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றவுடன் ஏழைகளுக்கான திட்டங்களை வடிவமைத்தபோது, கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டத்தை எடுத்து புதுப்பொலிவுடன் புதுப்பெயரிட்டு நாடு முழுவதும் இந்த மருந்தகங்களை உருவாக்கி ஏழைகள் பயன் அடைய முயன்று வருகின்றார்.
இன்று லட்சோப லட்சம் ஏழை எளிய மக்கள் மருத்துவச் செலவின் சுமையை தாங்க முடியாமல் பரிதவித்துக் கொண்டுள்ளனர். ஏனென்றால் மருந்துகளின் விலை என்பது கட்டுக்கடங்காமல் செல்லும் காலத்தில் இப்படியொரு திட்டம் என்பது ஏழைகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
இதனை எடுத்துச் சென்று மக்களுக்குச் சேவை செய்ய முன் வரும் எவருக்கும் உதவிட மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள புதிய BPPI என்ற அமைப்பு தயாராக உள்ளது. இந்தத் திட்டம் மக்களுக்குச் செல்ல வேண்டும் என்று நாம் எண்ணினால், நாம் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் எங்கே மக்கள் மருந்தகம் என்று கேட்க வேண்டும்.
அந்த மருந்தகம் வந்தால் நாம் இன்று செலவழிக்கும் தொகையில் 80% பணத்தைச் சேமிக்கலாம். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இதை ஆரம்பிக்கலாம். எல்லா தொண்டு நிறுவனங்களும் இதை ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவலாம்.
இந்த ஏழைகளுக்கான மக்கள் மருந்தகத் திட்டத்தை மறைத்தே வைத்திருக்கின்றார்கள். முதலில் உடனே எல்லா அரசு மருத்துவமனைகளிலும் மக்கள் மருந்தகம் அமைக்க அரசை வற்புறுத்த வேண்டும். அப்போதுதான் ஏழைகளுக்கான இத் திட்டம் ஏழைகளை சென்றடையும்.

No comments:

Post a Comment

NMC flipflops, puts onus on minister for patient appeals

NMC flipflops, puts onus on minister for patient appeals  5 Months Ago, Panel Had Said Will Hear Pleas  Rema.Nagarajan@timesofindia.com 12.0...