Saturday, November 4, 2017


கழிப்பறையில் ரூ.9.6 கோடி!அன்னூர் ஒன்றியத்தில் 'கொட்டியது' அரசு: 'அக்கடா' வழக்கத்தால் அத்தனையும் 'வேஸ்ட்!'

அன்னுார்:'என்னதான் சொல்லுங்க...வெட்டவெளியில அப்படியே காத்தாட 'போற' சுகம் வருமாங்க...? 'இயற்கை உபாதை கழிக்க, ஏன் வீட்டு கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை?' என்ற கேள்விக்கு, அன்னுாரில் ஆறுமுகம் என்பவர் அளித்த பதில்தான் இது!அன்னுார் மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் இதுதான் நிலைமை. திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதை தடுக்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, அரசு கழிப்பறை கட்டிக்கொடுத்தும், தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைக்கத்தான், அந்த கழிப்பறையை பயன்படுத்துகின்றனர் நம் மக்கள். அந்தளவுக்கு இருக்கிறது விழிப்புணர்வு!
அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளில், 189 கிராமங்களில் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊராட்சிகளில் கழிப்பிடம் இல்லாத வீடுகள் குறித்து, 2015ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி, 8,500 வீடுகளில், கழிப்பிடம் இல்லாதது தெரிய வந்தது.முதல் கட்டமாக, ஏழு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 100 சதவீத வீடுகளில் கழிப்பிடம் கட்டப்பட்டது. இரண்டாம் கட்டத்தில், கழிப்பிடம் கட்ட நான்கு ஊராட்சிகள் என மொத்தம், 21 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
கழிப்பிடம் கட்ட நிபந்தனை
அரசின் முழு சுகாதார திட்டத்தில், பயனாளியே கழிப்பிடம் கட்டிக் கொள்ள, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மூன்று அடிக்கு, நான்கு அடி நீள அகலத்துடன், ஏழு அடி உயரத்துடன் கழிப்பிடம் கட்ட வேண்டும். மூன்று அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட மூன்று வளையங்கள், இரு இடங்களில் அமைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின்படி, கழிப்பிடம் கட்டி முடித்தவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.800 வீடுகளில் கழிப்பறைகடந்த ஜூலையில், 100 சதவீத வீடுகளிலும், அரசின் மானியமான ஒன்பது கோடியே 60 லட்சம் ரூபாயில், 8,000 வீடுகளில், கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வளவு கோடி ரூபாய்கள் செலவிட்டு என்ன பயன்? 'காத்தாட போய்' பழக்கப்பட்டவர்களால், நான்கு சுவர்களுக்குள் 'அக்கடா' என கழிக்க முடியவில்லை. இதற்கு கழிப்பறைகளில் தண்ணீர் வசதி செய்து தராததையும், முக்கிய காரணமாக சொல்கின்றனர் பயனாளிகள்.
'ஆஸ்தான'இடங்கள்!
அன்னுார் ஒன்றியத்தில் மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், காட்டம்பட்டி, ஆம்போதி உள்ளிட்ட பல ஊராட்சிகளில், இன்னும் குளக்கரை மற்றும் மயான பாதை ஓரங்கள்தான், இங்குள்ள மக்களின் 'ஆஸ்தான' கழிப்பிடங்கள். இதனால் ஏற்படும் சுகாதார கேடு குறித்தெல்லாம், எவருக்கும் கவலை கிடையாது. அந்த பாதையை பயன்படுத்துவோர், மூக்கை பொத்தியபடிதான் செல்ல வேண்டி உள்ளது.அரசு மானியம் அளித்தும், கழிப்பிடங்களை பயன்படுத்தாமல், திறந்தவெளியை பயன்படுத்துவோரிடம், அதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் குறித்து அரசும், தொண்டு நிறுவனங்களும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே, சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை.
'திறந்தவெளியில் மலம்கழிப்பதால் நோய் பரவும்'''திறந்தவெளியில் மலம் கழிப்பதால், வயிற்றுப்போக்கு ஏற்படும். அங்கு அமரும் ஈக்கள், பின்னர் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் மீது அமரும். இதனால் நோய் தொற்று ஏற்படும். அருகிலுள்ள நீர் நிலைகளில் இவை கலப்பதால், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து திறந்தவெளியில் மலம் கழிப்பதால், கழிவுகள் மூலம் கிருமிகள் பரவும். ரத்த சோகை ஏற்படும். ரத்த சோகையால் வேறு நோய்களும் ஏற்படும். ஆகவே, திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் ரவிச்சந்திரன், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, அன்னுார்.ப்ரீயா போயேபழகி போச்சுங்க!''45 வருஷமா காத்தாட, அப்படி ப்ரீயா போயே பழகிட்டோமுங்க. நாலு சுவத்துக்குள்ளே உக்காந்தா, அவ்வளவு சீக்கிரமா வரும்னு தோணலீங்க. ஆனாலும், யாருக்கும் பாதிப்பு இல்லாத ஒதுக்குப்புறத்தைதான் அதுக்கு பயன்படுத்துறோம்,''
- ரங்கநாதன், கரியாம்பாளையம்.கழிப்பறை தரமில்லைஇதுதான் காரணமாம்''அதிகாரிகள், மூன்று அடி விட்டத்தில், இரண்டு இடங்களில் மூன்று வளையங்கள் அமைக்க வேண்டும்; மூன்று அடிக்கு நான்கு அடி நீள அகலத்தில், ஏழு அடி உயரத்தில், கழிப்பிடம் கட்ட வேண்டும் என்று கூறினர். அதிகாரிகள் கூறும் அளவுக்கு கழிப்பிடம் கட்ட குறைந்தது, 20 ஆயிரம் ரூபாய் தேவை. ஆனால் 12 ஆயிரம் ரூபாய் மட்டும் தருவதாக கூறினர். எனவே கட்ட மறுத்து விட்டோம். அதிகாரிகளே ஒப்பந்ததாரர் வைத்து அஸ்திவாரம் இல்லாமல் கட்டித்தந்தனர். எனவே கழிப்பிடத்தை பயன்படுத்துவதில்லை.
- மகேஷ் குமார், கரியாம்பாளையம்.'மணல் பாக்கெட்'விழிப்புணர்வு!''வீட்டு கழிப்பிடத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்; திறந்தவெளியை பயன்படுத்தக்கூடாது என, கிராமங்களில் கூறி வருகிறோம். இதற்காக அதிகாலை நேரத்தில், சில ஊராட்சிகளுக்கு கையில் மணல் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றோம். திறந்தவெளியை பயன்படுத்துவோரிடம், அந்த மணல் பாக்கெட்டை கொடுத்து, 'மலம் கழித்த பின், அதன்மீது போட்டு மூடவும்' என்று கூறினோம். கூச்சப்பட்டு சிலர், 'இனி கழிப்பிடத்தை பயன்படுத்துகிறோம்' என்று உறுதியளித்தனர். ஆனாலும் மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதுள்ளது,''
- இளவரசு, பி.டி.ஓ., அன்னுார் ஊராட்சி ஒன்றியம்.

No comments:

Post a Comment

news today 23.10.1024