Tuesday, November 28, 2017

திருவாரூர் அருகே மாணவர் முடியை பிளேடால் அறுத்து அவமதித்த ஆசிரியை கைது

2017-11-28@ 00:35:34


திருவாரூர்: திருவாரூர் அருகே பள்ளி மாணவர் முடியை பிளேடால் அறுத்து அவமதித்த அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். மேலும் துறை ரீதியாக தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டார். திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி சுந்தர் மகன் சுரேந்தர்(13). அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 25ம்தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் சுரேந்தரிடம் தலை முடியை ஏன் வெட்டவில்லை என்று கேட்ட வகுப்பு ஆசிரியை விஜயா (40) வேறொரு மாணவனை விட்டு பிளேடு வாங்கி வரச்செல்லி சுரேந்தர் தலை முடியினை அரைகுறையாக அறுத்து அவமானப்படுத்தினார். இதனையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பெற்றோரிடம் கூறி அழுதார். ஆத்திரமடைந்த மாணவனின் தந்தை சுந்தர் இதுகுறித்து கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் நேற்று ஆசிரியர் விஜயா மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல் மற்றும் சிறுவர்களை கொடுமைப்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். நன்னிலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசபெருமாள் முன் ஆஜர்படுத்தி திருவாரூர் பெண்கள் கிளை சிறையில் அவரை அடைத்தனர்.இந்த சம்பவம் மட்டுமின்றி ஆசிரியை விஜயா ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன் இதே மாணவனை தலையில் எண்ணை தடவி வரவில்லை என்ற காரணத்திற்காக சத்துணவு சமையல் அறையில் இருந்த பாமாயில் எண்ணையினை எடுத்து அவனது தலையில் ஊற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சத்துணவு சாப்பிடுவதற்காக மாணவர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வரிசையில் நிற்க முயன்றதை கண்ட ஆசிரியை விஜயா அவர்களது சாப்பாட்டு தட்டினை வாங்கி அதில் எச்சிலை துப்பியுள்ளார், அதற்கு முன்னதாக மாணவி ஒருவர் கிழிந்த சீருடையில் ஊக்கை போட்டு வந்ததற்காக அந்த சீருடையை பிடித்து கிழித்துள்ளார் என பெற்றோர்கள் தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து ஆசிரியை விஜயா மீது உடனே விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதனுக்கு நேற்று கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆசிரியை விஜயா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...