Thursday, November 30, 2017

நர்சுகள் போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை

Added : நவ 29, 2017 23:59

சென்னை: 'போராட்டத்தை கைவிட்டு, நர்சுகள், இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வாணயம் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நர்சுகள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகினறனர்.
அவர்களுக்கு, மாத ஊதியமாக, 7,700 ரூபாய் வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வு மற்றும் காலமுறை ஊதியம் வழங்க கோரி, 1,000க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், நவ., 27 முதல், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை முடக்க, சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.
மூன்றாவது நாளான நேற்று, உண்ணாவிரத போராட்டத்தில், நர்சுகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நர்சுகள் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஆவடியை சேர்ந்த கணேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், 'நர்சுகள் நடத்தி வரும் போராட்டம், சட்ட விரோதமானது. இதனால், ஏழை மக்கள், கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். சில இடங்களில் பிரசவம் கூட, நர்சுகள் இல்லாமல், ஆபத்தான நிலையில் நடந்துள்ளது' எனக் கூறியிருந்தார். இந்த மனு, நேற்று அவசர வழக்காக, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:இந்த போராட்டம், சட்ட விரோதமானது. நர்ஸ்கள், போராட்டத்தை கைவிட்டால் தான், வழக்கை விசாரிப்போம். ஏனென்றால், போராட்டத்தால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அதிக தொகை செலவழித்து, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாது. ஊதியம் குறைவாக இருக்கிறது என்றால், வேலையை விட்டு விட வேண்டியது தானே. போராட்டத்தை கைவிடுவதாக இருந்தால், நர்சுகள் வைக்கும் கோரிக்கை குறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அப்போது, நர்சுகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீண்ட துாரத்தில் இருந்து வந்துள்ளதால், பணிக்கு திரும்ப, இன்று மாலை வரை அவகாசம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்ட விரோதமாக நடைபெறும் போராட்டத்திற்கு, தடை விதிக்கப்படுகிறது. போராட்டத்தை வாபஸ் பெற்றால், சமமான பணிக்கு, சம ஊதியம் வழங்கும் கோரிக்கை குறித்து, தமிழக அரசு, நர்சுகளிடம் பேச்சில் ஈடுபட வேண்டும். இந்த உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டால், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும்.
இன்றைக்கே பணிக்கு திரும்ப வேண்டும். போராட்டத்தை கை விட்டு, பணிக்கு திரும்புபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கூடாது. பேச்சு குறித்து, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின், அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போராட்டம் வாபஸ்! : சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை, முதலில், நர்சுகள் ஏற்க மறுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அப்போது, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், உயர் நீதிமன்ற உத்தரவை, நர்சுகளிடம் படித்து காண்பித்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...